கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தோடு, மூக்குத்திகள்... கோவை நகைக்கடையில் பறிமுதல்
கோவை: கோவை நகைக்கடை ஒன்றில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கம்மல்கள் மற்றும் மூக்குத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மூக்குத்தி முரளி (45) என்பவர் பெரியகடை வீதியில் தங்க நகைக்கடை வைத்துள்ளார். இவர் கட்சி தலைவர்களின் பிறந்தநாளன்று, சிறு குழந்தைகளுக்கு போடும் மோதிரம், மூக்குத்தி, கம்மல் போன்றவற்றை ஆர்டரின் பெயரில் செய்து கொடுப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இவரது கடையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கம்மல்கள் மற்றும் மூக்குத்திகள் தயார் செய்யப்பட்டு, டெலிவரி செய்ய வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தேர்தல் அடுத்தமாதம் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இவற்றை ஏதாவது ஒரு கட்சி ஆர்டர் கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியாளருமான அர்ச்சனா பட்நாயக் உத்தரவின்பேரில் நேற்று, முரளியின் கடையில் கோவை தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கடையில் இருந்து மூட்டை மூட்டையாக கம்மல்களும், மூக்குத்தியும் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது வருமான வரித்துறை துணை ஆணையர் ராணி காஞ்சனா தலைமையிலான அதிகாரிகள் குழு, அங்கிருந்த ஆபரணங்கள் குறித்து முரளியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அங்கிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கம்மல்கள் மற்றும் மூக்குத்திகளுக்கு முரளியால் உரிய ஆவணங்கள் அளிக்க இயலவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளையும் அவர்கள் நகைக்கடைக்குள்ளேயே வைத்து பூட்டினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியகடைவீதி போலீசார், நகைக்கடையைத் திறந்து தேர்தல் அதிகாரிகளை மீட்டனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் தலைமையில் நகை கடை உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், மாவட்ட ஆட்சியாளர் அர்ச்சனா பட்நாயக்கிடம் இது குறித்து மனு ஒன்றை அளித்தனர்.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆபரணங்களின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டும் என கணக்கிடப்படுவதால், அவை வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications