ஐபிஎல் ரஜினி யோசனை குறித்து பரிசீலித்து வருகிறோம்! - சிஎஸ்கே உரிமையாளர்
Recommended Video

சென்னை: காவிரி பிரச்சினையில் தமிழர்களின் உணர்வை ஐபிஎல் போட்டிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்ற ரஜினிகாந்தின் யோசனை குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழகமும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அனைத்துக் கட்சிகள், மக்கள், மாணவர்கள் என எல்லோருமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது, மீறி நடத்தினால் மைதானத்துக்குள் போராட்டம் வெடிக்கும் என்று போராட்டக்காரர்கள் எச்சரித்தனர். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னையில் பேட்டியளித்த ரஜினிகாந்த் ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தில் நடத்தாமல் தவிர்க்க வேண்டும் என்றார். அப்படி முடியாவிட்டால் சென்னை அணியைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்தபடி விளையாடி தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தரலாம் என்றார். இதுகுறித்து பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவான விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஐபிஎல் போட்டிகளில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும் என்ற ரஜினிகாந்தின் யோசனை குறித்து பரிசீலித்து வருகிறோம். விரைவில் இதுகுறித்து அறிவிப்போம்," என்றார்.












Click it and Unblock the Notifications