அம்மிக்கல்லை போட்டு மாமியாரை கொன்ற அம்சவள்ளிக்கு ஆயுள் தண்டனை- கடலூர் கோர்ட் தீர்ப்பு
கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மாமியாரை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மருமகளுக்கு கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடலூர்: கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததை பார்த்து தட்டிக்கேட்ட மாமியாரை அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த மருமகளுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த காதலனுக்கும் கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் சிறகிழந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன், அவரது மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு புவனேஷ், 4, யோகேஷ்,1 இரண்டு மகன்கள் உள்ளனர். லட்சுமணன் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். லட்சுமணன் தம்பி இளவரசனின்,30 நண்பர் காளிரத்தினம்23.
இளவரசனை சந்திக்க காளிரத்தினம் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லும்போது, அம்சவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அம்சவள்ளியுடன் காளிரத்தினம் தனிமையில் இருந்துள்ளார். இதை லட்சுமணின் தாய் மீனாட்சி,50 பார்த்துவிட்டார். மருமகள் அம்சவள்ளியை தட்டிக்கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அம்சவள்ளி, கள்ளக்காதலன் காளிரத்தினத்துடன் சேர்ந்து அம்மி கல்லால் தாக்கி மாமியார் மீனாட்சியை கொலை செய்தார். இதுதொடர்பாக குமராட்சி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திங்கட்கிழமை இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், மாமியாரை கொலை செய்த மருமகள் அம்சவள்ளி, கள்ளக்காதலன் காளிரத்தினம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
கள்ளக்காதலுக்காக மாமியாரை கொன்ற மருமகள் அம்சவள்ளி இப்போது சிறையில் இருக்கிறார். பாட்டியும் இறந்து விட்ட நிலையில், தந்தையும் வெளிநாட்டில் இருக்க, ஒருபாவமும் அறியாத இரண்டு குழந்தைகள்தான் ஆதரவற்ற நிலையில் உள்ளதாக கிராமத்தினர் கூறியுள்ளனர்.