அரபிக் கடலில் உருவாகியுள்ள அஷோபா புயலால் தமிழகம், கர்நாடகா, அமீரகத்தில் கனமழை
சென்னை: அரபிக் கடலில் உருவாகியுள்ள அஷோபா புயல் காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, குஜராத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் மேற்கு-தென்மேற்கு மும்பையில் இருந்து 590 கிலோமீட்டர் தூரத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளது. அஷோபா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்னும் 24 மணிநேரத்தில் வலுவடையும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் புயல் இந்தியாவில் கரையைக் கடக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அஷோபாவால் மும்பை, கோவா, கர்நாடகா, குஜராத், பாகிஸ்தானின் தென் பகுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
புயலால் தமிழகத்தில் சேலம் மற்றும் கடலூரில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்நேரம் தென்மேற்கு பருவமழை துவங்கியிருக்க வேண்டும். அஷோபா புயலால் பருவமழை தாமதம் ஆகியுள்ளது.
புயலால் கர்நாடகாவின் கடலோர பகுதிகள், கோவா மற்றும் மகாராஷ்டிராவில் மணிக்கு 90 முதல் 129 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கடலில் அலைகள் 13 முதல் 30 அடி வரை உயரக்கூடும். இதனால் கர்நாடகா, கோவா மற்றும் குஜராத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்த 36 மணிநேரத்தில் இந்த புயல் வடக்கு-வடமேற்கு பகுதி நோக்கி நகர்ந்து சென்று மேலும் வலுவடையும் என்று கூறப்படுகிறது. புயல் ஓமன் வரை சென்று அங்கு கரையைக்கடக்க உள்ளது.












Click it and Unblock the Notifications