தமிழகத்தை நோக்கி திரும்புகிறது "மாதி' புயல்: மழை எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள "மாதி' புயல், வலுவிழந்து தமிழகத்தை நோக்கி திரும்பும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இப்போது அதி தீவிர "மாதி' புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் இப்போது சென்னையில் இருந்து வடகிழக்கே 510 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்த புயல் மெதுவாக வலுவிழந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் இது வலுவிழந்த நிலையில் தமிழகம் நோக்கி தென்மேற்கு திசையில் திரும்பும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, தாழ்வு நிலையாகவோ தமிழக கடற்கரையை ஓரிரு நாள்களில் கடக்கும். அப்போது சில நாள்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மழையோ இடியுடன் கூடிய மழையோ செவ்வாய்க்கிழமை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் தமிழகத்தில் சிவகிரி பகுதியில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் 20 மி.மீ. மழையும், மேட்டுப்பட்டியில் 10 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் புயல் நிலை கொண்டிருப்பதால் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்றும் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications