வேலை வேண்டும்... தினக் கூலி ஊழியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: மீண்டும் வேலை வழங்கக் கோரி, பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப் பணித் துறை தினக் கூலி ஊழியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் விறுவிறுவென பல்வேறு அரசுத் துறைகளில் ஆயிரக்கணக்கான தினக் கூலி ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இந்த ஆள் சேர்ப்பு நடைபெறாமல் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக ஆள்சேர்ப்பு நடைபெற்றது என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது.
மேலும், முதலமைச்சர் ரங்கசாமி தேர்தலில் வெற்றி பெற தவறான முறையில் ஊழியர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர், விசாரணை நடத்தப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் அளித்த புகார் உறுதியானதையடுத்து பொதுப்பணித் துறையில் நியமிக்கப்பட்டிருந்த 2,650 ஊழயர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்.
இதுதவிர பல்வேறு துறைகளிலும் நியமிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.