தலித் சிறுமி நந்தினி கொடூர கொலை: இந்து முன்னணி மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது!
தலித் சிறுமி நந்தினி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் ஆட்சியர் சரவண வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர்: தலித் சிறுமி நந்தினி ப்டுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் மாவட்ட்ட ஆட்சியர் சரவண வேல்ராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரியலூர் அருகேயுள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்தவர் நந்தினி, 16. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் டிசம்பர் 26 அன்று காணாமல்போனார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை போலீசார் அலட்சியப்படுத்தவே, தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் தந்த அழுத்தத்தின் விளைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
ஜனவரி 14 தை திருநாள் தினத்தன்று கீழமாளிகை கிராமத்தில் ஒரு கிணற்றிலிருந்து நிர்வாண நிலையில் இந்தச் சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
இது குறித்து நடந்த விசாரணையில் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் பிரமுகரான மணிகண்டன் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து நந்தினியை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மணிகண்டனும் அவனது நண்பர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காவல்துறை அலட்சியம்
நந்தினி காணாமல் போய் 11 நாட்களுக்குப் பிறகுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது . 20 நாட்களுக்குப் பிறகுதான் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது இது தமிழக காவல்துறைக்கு தலைகுனிவு.
இந்து முன்னணி நிர்வாகி
கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் இந்து முன்னணி ஒன்றிய செயலராக இருக்கிறார். இவர் நந்தினியை காதலித்துள்ளார். ஒரு ஆண்டாக காதலித்தததன் விளைவாக நந்தினி கர்ப்பமானார். இதனால் திருமணத்துக்கு அவர் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
நந்தினி கடத்தல்
நந்தினியை காதலிப்பது போல பழகி அவரை அனுபவித்து விட்டு ஏமாற்றிவிட்டார். நந்தினியின் தொடர் வற்புறுத்தல் காரணமாக மணிகண்டன், தனது நண்பர்கள் மணிவண்ணன், வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகியோருடன் கடந்த டிசம்பர் 26ஆம் தேதியன்று கடத்திச் சென்று கூட்டாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
கொடூர கொலை
இதனையடுத்து பிளேடால் அவரது பிறப்புறுப்பை அறுத்து,அவரின் வயிற்றில் இருந்த கருவை வெளியே எடுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிக இரத்தப் போக்கால் நந்தினி அந்த இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.பின்னர் அவரது உடலை கல்லில் கட்டி,அருகிலுள்ள கிணற்றில் போட்டுள்ளனர்.மேலும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக அதே கிணற்றில் நாய் ஒன்றை கொன்று,அதன் உடலையும் கிணற்றில் போட்டுள்ளனர்.
4 பேர் கைது
இது தமிழகத்தில் நடந்த தன்னெழுச்சி போராட்டம் காரணமாக ஊடகங்களில் அதிகம் வெளியாகவில்லை. சமூக வலைத்தளங்களில் நந்தினியின் சடலத்தை பதிவிட்டு பலரும் கேள்வி எழுப்பியதன் விளைவாக மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குண்டர் சட்டம்
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் ஆட்சியர் சரவண வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்னும் ஒரு ஆண்டுக்கு,மணிகண்டனால் ஜாமீனில் கூட வெளியே வர முடியாது.
தப்பிக்க வாய்ப்பு
நந்தினி கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் தப்புவதற்கே நிறைய வாய்ப்பிருப்பதாகப் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகருக்கும் கொலையில் தொடர்பிருப்பதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.