நர்சிங் கல்லூரி விடுதியில் தலித் மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. மார்த்தாண்டத்தில் பரபரப்பு
கன்னியாகுமரி: மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் புளியங்குடியைச் சேர்ந்த தலித் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த தலித் மாணவர் செல்வக்குமார் (21), மார்த்தாண்டம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரிக்கு சொந்தமான ஐரேணிபுரத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். இன்று அதிகாலை விடுதி வளாகத்தில் மர்மான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவரின் மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தகவல் அறிந்த மாணவரின் பெற்றோர்கள் மாணவர் உயிரிழந்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.