உடுமலை தலித் இளைஞர் படுகொலை வழக்கு: கவுசல்யாவின் உறவினர் நீதிமன்றத்தில் சரண்
திண்டுக்கல்: காதல் திருமணம் செய்து கொண்ட தலித் இளைஞர் சங்கர் உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சங்கர், 22. தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கர், உயர் வகுப்பைச் சேர்ந்த 19 வயது கவுசல்யாவை 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் - கவுசல்யா தம்பதியை கடந்த 12 ஆம் தேதி ஒரு கும்பல் உடுமலைப்பேட்டையில் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை நடந்த மறுநாள் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும், இக்கொலையில் தொடர்புடைய ஜெகதீஷ், மணிகண்டன், செல்வா, காமராஜன் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பதுங்கியிருந்ததை அறிந்து அவர்களை 15ஆம் தேதி அதிகாலை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் சங்கரின் படுகொலை வழக்கில் கவுசல்யாவின் உறவினரான பிரசன்னா என்பவர் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை மார்ச் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.