தலித் இளைஞர் சங்கரின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரில் அடக்கம் !
திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் உடல் அவரது சொந்த ஊரில் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சங்கர், 22. தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கர், உயர் வகுப்பைச் சேர்ந்த 19 வயது கவுசல்யாவை 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இந்த இளம் தம்பதியர் நேற்று முன்தினம் உடுமைலையில் பொருள்கள் வாங்கிவிட்டு சாலையில் நடந்து வந்த போது, அங்கு வந்த கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த கவுசல்யா கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிசிடிவியில் பதிவான தாக்குதல் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உயிரிழந்த சங்கரின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
இந்த சம்பவத்தை கண்டித்து பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன. உடலை வாங்க மறுத்து சங்கரின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறவினர்களைச் சமாதானப்படுத்தி உடலை ஒப்படைத்தனர். உடனடியாக இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
போலீஸ் பாதுகாப்போடு சங்கரின் உடல், சொந்த ஊரான கொமரலிங்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடல் ஊருக்குக் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போலீசார் உத்தரவுப்படி நேரடியாக சுடகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை எரியூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு அப்பகுதி இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் அவரது உடல் சங்கரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இருப்பினும் கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை அடக்கம் செய்யமாட்டோம் எனக் கூறி சங்கரின் உறவினர்கள் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் சங்கரின் உடல் அவரது சொந்த ஊரான கொமரலிங்கத்தில், போலீசார் பாதுகாப்பில் அவரது தந்தை வேலுச்சாமி முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.