பொன்னேரியில் கொட்டிய 37 செ.மீ மழை- அணை மதகு உடைப்பு: மக்கள் வெளியேற்றம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கொட்டித்தீர்த்த கனமழையால் லட்சுமிபுரத்தில் ஆரணி ஆற்று அணைக்கட்டின் மதகு உடைந்தது. வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உள்பட வடமாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் பாதிப்பாக பென்னேரியை அடுத்த பெரும்பேடு குப்பத்தில் ஆரணி ஆற்றின் கரை உடைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பென்னேரியை அடுத்த பெரும்பேடு குப்பத்தில் ஆரணி ஆற்றின் கரை உடைந்துள்ளது. பெரும்பேடு குப்பம் பகுதிகளில் நீர் சூழும் என்பதால் மக்கள் வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.இதனால் இப்பகுதியில் வசிக்கும் மாக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெளியேறிய மக்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 369 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. பொன்னேரியை அடுத்த ஆமூர் ஊராட்சி முஸ்லிம்நகரில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு உள்ள பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. பொன்னேரி பள்ளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசு மகளிர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

விளைநிலங்கள் நாசம்
மீஞ்சூர் பகுதியில் பலத்த மழை காரணமாக வீடுகளுக்கு உள்ளேயும், விளை நிலங்களிலும் மழைநீர் தேங்கியது. இதனால் அங்கு பயிரிட்டு இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. விச்சூர் கிராமத்தில் உள்ள வீடுகள், சிப்காட் தொழிற்பேட்டைகளில் வெள்ளம் புகுந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மீஞ்சூர் பேரூராட்சி பகுதிகள் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு உள்ளது. மீஞ்சூர் ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நெய்தவாயல் ஊராட்சி பகுதி முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.

லட்சுமிபுரம் அணை
ஆரணியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தடுப்பணைகள், அணைக்கட்டுகளில் வெள்ளம் வழித்தோடி ஆற்றில் சீறிப்பாய்ந்து வருகிறது. பொன்னேரியை அடுத்த லட்சுமிபுரம் அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகமானதால் கூடுதலாக வரும் 4 ஆயிரம் கனஅடி நீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

ஆரணி ஆற்றில் வெள்ளம்
அணைக்கட்டின் வலது புற கால்வாயின் இரும்பு தடுப்புச்சுவர் நீரின் அழுத்தம் காரணமாக திரும்பியது. இதனால் கூடுதலாக வெள்ளநீர் வெளியேறுகிறது. இந்த உபரிநீர் ஆரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆரணி ஆற்றின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டதால் பொதுப்பணி துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகளை ஆங்காங்கே அடுக்கி வைத்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications