சென்னையில் காய்ச்சலால் மகள் இறந்த செய்தியை கேட்டு சவுதியில் அதிர்ச்சியில் தந்தை மரணம்
தஞ்சாவூர்: மகள் காய்ச்சலால் இறந்த செய்தி அறிந்த தந்தை மாரடைப்பால் உயிர் இழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருபுவனத்தில் உள்ள வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(58). அவர் கடந்த 15 ஆண்டுகளாக சவுதியில் வேலை பார்த்து வந்தார்.
ராஜேந்திரனின் மனைவி வள்ளி. அவர்களுக்கு சிந்துஜா(23), கணேஷ்(18) என்று இரண்டு குழந்தைகள். கணேஷ் ஐடிஐ-இல் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
பி.காம். பட்டதாரியான சிந்துஜா சென்னையில் உள்ள மாமா வீட்டில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி சிந்துஜாவுக்கு காய்ச்சல் ஏற்பட அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அவர் இறந்த செய்தி அறிந்த ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரும் அதே நாளில் உயிர் இழந்தார். சவுதியில் இருந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர காலதாமதமாகிவிட்டது. 45 நாட்கள் கழித்து ராஜேந்திரனின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு வந்தது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருபுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.