ஓபிஎஸ் நியமித்த உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிரான்ஸ்பர்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் 11 நாட்களுக்கு முன்பு நியமனம் செய்த உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த போது உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவலர் நலவாழ்வுத்துறை ஐ.ஜியாக தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டார். 11 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தால் உளவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்ட நிலையில் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட்சன் தேவசீர்வாதம்
உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த கண்ணப்பன் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த 2015ஆம்மு ஜூலை 31ஆம் தேதியன்று புதிய உளவுத்துறை ஐ.ஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.

திருச்சி சத்தியமூர்த்தி
அதே ஆண்டு டிசம்பர் மாதம் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

ஓபிஎஸ் நியமனம்
இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். சசிகலா உடன் மோதல் வெடித்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் நாளுக்கு முதல்நாள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியன்று சத்தியமூர்த்திக்கு பதிலாக டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டார்.

உளவுத்துறை ஐஜி மாற்றம்
இப்போது சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் உளவுத்துறை ஐஜியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு சென்னை காவலர் நலவாழ்வுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தினால் நியமனம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி 11 நாட்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவுத்துறை ஐஜி யார்?
விடுப்பில் சென்ற உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி மீண்டும் அந்த பொறுப்பை ஏற்கும் மனநிலையில் இல்லை. எனவே காலியாக உள்ள அந்தப் பதவியில் தற்போது சென்னை நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் காவல் ஆணையராக உள்ள தாமரைக் கண்ணனை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications