தலைமைச் செயலகம் எதிரே டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவிகள் தீக்குளிக்க முயற்சி!
சென்னை: சென்னை தலைமைச் செயலகம் எதிரே டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், குன்னவலம் டி.டி.நகரில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியில் கடந்த 2011ஆம் ஆண்டு 103 மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு முதலாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் டி.டி. மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பதாக கூறி, புதிதாக சேர்க்கப்பட்ட மாணவ-மாணவிகள் அனைவரையும் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுடைய கல்வி பாதிக்காத வண்ணம் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதினை வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் ஓராண்டுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தை 50க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காலையில் முற்றுகையிட முயன்றனர். அப்போது, அவர்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர்.
திடீரென வேனில் இருந்த இரண்டு மாணவிகள் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றனர். இதை பார்த்த காவல்துறையினர் உடனடியாக தடுத்தனர். பின்னர், மாணவிகளை பலத்த பாதுகாப்புடன் கொண்டித்தோப்புக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
தலைமைச் செயலகம் எதிரே மாணவிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications