பிரிட்டானியா மில்க் பிஸ்கட்டில் செத்துக் கிடந்த பல்லி!
சென்னை: பிரிட்டானியா மில்க் பிஸ்கட்... குழந்தைகள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் இந்த பிஸ்கட்டை இன்று வேளச்சேரியில் வாங்கிய ஒரு மாணவிக்கு அதிர்ச்சியின் உச்சம்.
காரணம், அதில் இரு பிஸ்கட்டுகளுக்கு நடுவில் செத்துக் கிடந்தது ஒரு பல்லி! அதுவும் முழுசாகக் கிடந்தது அந்தப் பல்லி.
கோடிகளை கல்லா கட்டும் மிகப் பெரிய தொழில் நிறுவனம் பிரிட்டானியா. இந்தியாவின் முன்னணி பிஸ்கட் மற்றும் கேக் உற்பத்தி நிறுவனம் இது.
இந்த நிறுவனத்தின் அனைத்துத் தயாரிப்புகளுமே குழந்தைகளைக் குறிவைத்து தயாரிக்கப்படுபவையே.
ஆனால் இந்த நிறுவனம் தனது பிரதான பிஸ்கட் உற்பத்தியில் இத்தனை கவனக் குறைவாக இருந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியுற வைத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தர குறிப்பிட்ட பள்ளி மாணவியின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
பிரிட்டானியா நிறுவனத்தின் சென்னைப் பிரிவைத் தொடர்பு கொண்டபோது, இதுகுறித்து கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.