அடுக்குமாடிக் குடியிருப்பு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு
சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 18 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மாலை வரை 13 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இரவில் மேலும் 5 உடல்கள் கிடைத்தன.
அடுத்தடுத்து உடல்கள் கிடைக்க ஆரம்பித்திருப்பதால் மேலும் பலர் உயிரிழந்த நிலையில் அல்லது காயமடைந்த நிலையில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே தங்களது குடும்பங்களைச் சேர்ந்த 37 பேரைக் காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் கூறியுள்ளதால் அச்சம் அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் உள்ளேதான் சிக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
தீயணைப்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கான்கிரீட் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை கண்டறிவதற்காக நவீன கேமராக்களும், மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன.