சத்தியமூர்த்தி பவன் பூட்டு உடைப்பு விவகாரம்: ஈவிகேஎஸ், கோபண்ணா மீது மிரட்டல் வழக்கு
சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஊடக பிரிவு தலைவராக இருக்கும் கோபண்ணா உள்ளிட்டோர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விஜய் இளஞ்செழியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. மாநில பொதுச் செயலாளர்களாக பதவி வகிக்கும் செல்வம், சிரஞ்சீவி, ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொறுப்புக் குழு அமைத்து இயங்கி வருகின்றனர்.
இதனிடையே இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விஜய இளஞ்செழியன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று சத்தியமூர்த்திபவனுக்கு வந்தனர். அப்போது இளைஞர் காங்கிரஸ் பிரிவுக்கு ஒரு அறை ஒதுக்க வேண்டும் எனக் கூறி சத்தியமூர்த்தி பவன் நிர்வாகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா பயன்படுத்தும் அறையின் பூட்டை உடைக்கப் போவதாக கூறியுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடனடியாக சத்தியமூர்த்திபவன் வந்து, அங்கிருந்த விஜய இளஞ்செழியனுடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன்பின்னர் விஜய இளஞ்செழியன் ஆதரவாளர்களுக்கும், இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. உடனடியாக மூத்த தலைவர்கள் தலையிட்டு, தலைவரை நியமிக்கும் வரை யாரும் எந்த அறையும் வழங்கப்படமாட்டாது என்று சமாதானம் செய்தனர். இதையடுத்து, இருதரப்பும் கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து விஜய் இளஞ்செழியன் சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் இன்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், இளங்கோவன், கோபண்ணா உள்ளிட்ட 7 பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறியுள்ளார். விஜய் இளஞ்செழியன் கொடுத்த புகாரின் பேரில் இளங்கோவன் உள்ளிட்ட 7 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.