இடிந்தகரை குண்டு வெடிப்பு சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்வு
கூடங்குளம்: கூடங்குளம் அருகே சுனாமி காலனியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
கூடங்குளம் அருகே இடிந்தகரை சுனாமி காலனியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் கடந்த மாதம் 26-ந்தேதி வெடித்து சிதறியது. இதில் பிரமிளா, சுபிஷ்டன், சுபிதா, வளன், மகிமைராஜ் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காயமடைந்த யாகப்பன் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ரோஸ், விஜய், சேசுமரியசூசை ஆகியோர் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் சேசுமரியசூசை கடந்த 2ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோஸ் செவ்வாய்கிழமை மாலை உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இடிந்தகரை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களில் பாலிடெக்னிக் மாணவரான விஜய் மட்டும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ரோஸ், அவரது மகள் சுபிதா, மகன் சுபிஷ்டன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெடி விபத்தில் பலியாகியுள்ளது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications