மழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு திமுக, அதிமுகவே காரணம்: ஜி.கே.வாசனும் சொல்லிட்டாரு...
சென்னை: கடந்த 40 ஆண்டுகால திராவிட ஆட்சியாளர்கள் ஏரிகளையும், குளங்களையும் சரியாக தூர்வாரியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதற்கு திமுக, அதிமுகவினரே பொறுப்பு என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6.5 லட்சம் அளவில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி, நல உதவிகளை வழங்கினார்.

தூர்வாராத அரசுகள்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்துள்ளது. வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

வீணான மழைநீர்
கடந்த 40 ஆண்டுகால திராவிட ஆட்சியாளர்கள் ஏரிகளையும், குளங்களையும் சரியாக தூர்வாரியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. இந்த நிலைக்கு அவர்களே பொறுப்பு. அவர்கள் தங்கள் கடமையை செய்யாததால் மழைநீரை சேமிக்க முடியாமல் போய் விட்டது.

மழை கற்பித்த பாடம்
சுமார் 23 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் போய் கலந்து உள்ளது. இவ்வாறு தண்ணீர் வீணடிக்கப்பட்டது ஒரு அரசுக்கு நல்லதல்ல. திராவிட ஆட்சியாளர்களுக்கு இந்த மழை பாடம் கற்பித்துள்ளது.

ரூ.500 கோடி போதுமா?
ரூ.500 கோடி நிவாரண தொகையை அரசு அறிவித்துள்ளது. இது போதுமானது அல்ல. சாலைகள் சேதம் அடைந்துள்ளது. எனவே ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அரசு கண்காணிக்க வேண்டும்.

பிரதமர் கண்டுகொள்ளவில்லை
தமிழக மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆனால் பிரதமர் இது குறித்து எந்த கவலையும் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும். மத்திய குழுவையும் அனுப்பி வெள்ள சேதத்தை பார்வையிட வேண்டும் என்றார் ஜி.கே.வாசன்.

தேர்தல் கூட்டணி
பீகாரை போல் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து மகா கூட்டணி அமைக்கும் சூழ்நிலை தமிழகத்தில் உருவாக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே? என்று ஜி.கே.வாசனிட்ம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், ‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்து நாங்கள் அறிவிப்போம்' என்றார்.












Click it and Unblock the Notifications