நாகைக்கு வடக்கே கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
சென்னை: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை நாகப்பட்டினத்துக்கு வடக்கே கரையை கடந்தது.
காற்றழுத்த மண்டலமானது புயலாக மாறாமல் இன்று மாலை 3.30 மணிக்கு கரையை கடந்தது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.

பலத்த காற்றுடன் மழை
புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. தரைக்காற்றும் பலமாக வீசியது. மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசியது.

நாகையில் காற்றுடன் மழை
நாகை மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் தரைக்காற்று பலமாக வீசியது. பலத்த காற்றுக்கு இடையே வாகன ஓட்டிகள் தடுமாறியபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.

புயல் பாதுகாப்பு மையம்
நாகை மாவட்டத்தில் 19 இடங்களில் புயல் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் புயல் பாதுகாப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மயிலாடுதுறையில் இன்று காலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. நாகை, திருவாரூர், மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வயல்களில் வெள்ளம்
திருவாரூர் மாவட்டத்தில் இன்று காற்றுடன் மழை பெய்தது. வயல்வெளிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் அதனை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை, நாகை மாவட்ட மீனவர்கள் இன்றும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

காற்றின் வேகம் அதிகம்
கடலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்தது. இன்று காற்றின் வேகம் அதிகரித்தஹ்டு. கடலூரில் இன்று 5 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையில் ஓய்வெடுக்கின்றன.

சிதம்பரத்தில் தயார்
சிதம்பரம் பகுதியில் நேற்று மாலை சப்- கலெக்டர் அரவிந்த் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். புயல் பாதுகாப்பு மையங்கள், சமுதாய நலக்கூடங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளனவா? என பார்வையிட்டார். மேலும் ரேசன் கடைகளில் போதிய அளவில் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறதா? என் பதையும் ஆய்வு செய்தார். மீட்பு பணிக்காக பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். மீட்பு நடவடிக்கைக்காக கடலூரில் இருந்து 5 படகுகள் சிதம்பரத்துக்கு வரவழைக்கப்பட்டன. மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

புயல் எச்சரிக்கை கூண்டு
திருச்சி, அரியலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மழை தொடர்ந்தது. சென்னை எண்ணூர், நாகை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், பாம்பன், துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது. மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.












Click it and Unblock the Notifications