தீபா நடத்துவதெல்லாம் ஒரு கட்சியா…. தேர்தல் வந்தால் எல்லாம் காலி… மனைவியுடன் இணைய மாதவன் புதுதிட்டம்
தீபா நடத்துவதெல்லாம் ஒரு கட்சியா என்று தீபாவின் கணவரும் எம்.ஜெ.தி.மு.க.வின் நிறுவனருமான மாதவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நடத்தும் பேரவை எல்லாம் ஒரு கட்சியா என்று அவரது கணவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவரான மாதவன், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தீபா பேரவையில் இருந்து விலகினார்.
மேலும், தனக்கு ஒரு கோடிக்கும் மேல் தொண்டர்கள் ஆதரவு இருப்பதாகக் கூறிக் கொண்டு மாதவன், எம்.ஜெ.தி.மு.க. என்ற தனிக் கட்சி ஒன்றை அண்மையில் தொடங்கினார்.

தொடர் போராட்டம்
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மாதவன், தான் தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்துவிதமான போராட்டத்திலும் பங்கேற்றவன் என்று தெரிவித்தார். அதுவும் நெடுவாசலில் நடந்து கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தான் பங்கேற்றவன் என்று கூறினார். தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை மாதவன் கண்டித்தார்.

மாவட்டச் செயலாளர் பட்டியல்
செய்தியாளர் சந்திப்பில், அவரது கட்சியில் உள்ள 27 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை மாதவன் வெளியிட்டார். 2-ம் கட்டமாக மீதம் உள்ள மாவட்ட செயலாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று மாதவன் தெரிவித்தார்.

உள்ளாட்சியில் தனித்துப் போட்டி
வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளோம். கட்சியை பலப்படுத்த மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன் என்று மாதவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தீபா நடத்துவது கட்சியா?
தனது மனைவி தீபாவும், தானும் ஓர் அணியில் இணைவது குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்று மாதவன் கூறினார். மேலும், தீபா நடத்துவது கட்சியே அல்ல என்றும் பொதுத்தேர்தல் வந்தால்தான் பலம் பொருந்தியவர்கள் யார்? என்பது தெரிய வரும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தீபாவுடன் போட்டியா?
தன்னுடைய கட்சி இடைத்தேர்தலை சந்திக்காது. நேரடியாக உள்ளாட்சி மற்றும் பொதுத்தேர்தலைத்தான் சந்திக்கும் என்று மாதவன் கூறினார். அதே நேரத்தில் தீபா போட்டியிடும் தொகுதியில் தான் போட்டியிட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications