மிரட்டல், நெருக்கடியை மீறி தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை- 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தீபா பேரவையை மாவட்டம் தோறும் பலப்படுத்தப் போவதாக தீபாவின் ஆதரவாளர்கள் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
சென்னை: சென்னை நங்கநல்லூரில் இன்று தீபா ஆதரவாளர்கள் கடும் நெருக்கடிக்கு இடையே ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி 5 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். தி.நகர் வெங்கட்நாராயணா சாலை அருகே உள்ள சிவஞானம் சாலையில் உள்ள தீபாவின் வீடடில் அவரை சந்திப்பதற்காக தொண்டர்களும் பொது மக்களும் தினமும் கூட்டம் கூட்டமாக திரள்கிறார்கள்.
வீட்டுக்கு வரும் தொண்டர்களை தீபாவின் கணவர் மாதவன் காலையில் சந்தித்து பேசி வருகிறார். மாலையில் தீபா தொண்டர்களை சந்தித்து சிறிது நேரம் அவர்களிடம் உரையாற்றுகிறார்.

குவியும் ஆதரவாளர்கள்
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இது போன்று தொண்டர்களை சந்தித்து வரும் தீபா, கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனது அரசியல் பயணம் எப்போது தொடங்கும் என்பதை வெளிப்படையாக அறிவித்தார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பிறந்த நாளான வருகிற 17ஆம்தேதி அன்று எனது அரசியல் பயணம் தொடங்கும் என்று கூறியிருந்தார்.

ஆலோசனைக்கூட்டம்
தீபாவின் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், சென்னையில் இன்று முதல் முறையாக தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த இருந்தனர்.

ஆதரவாளர்கள் முழக்கம்
இதற்காக தமிழகம் முழுவதும் தீபாவின் ஆதரவாளர்கள் சென்னையில் குவிந்தனர். இன்று தி. நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற அவர்கள், ஆலோசனைக் கூட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். தீபா விரைவில் முதல்வராக அரியணை ஏறுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.

அரசியல் பயணம்
சென்னை நங்கநல்லூரில் உள்ள கே.சி.டி. திருமண மண்டபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தீபாவின் ஆதரவாளர்களும், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்வதற்காக திரண்டனர்.

திடீர் நெருக்கடி
தீபாவின் அரசியல் பயணம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது. திருமண மண்டபத்தின் உரிமையாளர், தீபாவின் ஆதரவாளர்கள் கொடுத்த முன்பணத்தை திருப்பி கொடுக்கவே, 3 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக் கூட்டம் ரத்தானதாக தகவல் வெளியானது.

தீர்மானம் நிறைவேற்றம்
செய்தியாளர்களிடம் பேசிய தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர், எங்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகளைக் கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம். தீபாவை முதல்வராக அமர்த்தும் வரை ஓயமாட்டோம் என்றும் தெரிவித்தார். கடும் மிரட்டல், நெருக்கடிக்கு இடையே 4 மணியளவில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தீபா பேரவையை மாவட்டம் தோறும் பலப்படுத்துவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications