சென்னையில் குவியும் ஆதரவாளர்கள்.. சசிகலாவை எதிர்க்க தீபா தொடர் ஆலோசனை! கிளைமேக்ஸ் நெருங்குகிறது?
தன் ஆதரவாளர்களை சென்னைக்கு வரும்படி தீபா அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுடன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தீவிர ஆலோசனை நடத்த இருக்கிறார்.
சென்னை: அதிமுகவுக்கு தலைமையேற்க வரும்படி, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். இக்கோரிக்கையுடன் பலரும் சென்னையில் குவிந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளராக சீனியர் நிர்வாகிகளால் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது.
ஜெயலலிதாவை போன்ற தோற்றம்-குரல் கொண்ட அவரின் அண்ணன் மகள் தீபாவே அதிமுக தலைமையேற்க வேண்டும், அல்லது எதிர்த்து நின்று களமாட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
தொண்டர்கள்
தினமும் தீபாவின் சென்னை தி.நகர் இல்லத்தின் முன்பு ஆயிரக்கணக்கான ஆண்-பெண் தொண்டர்கள் குவிந்து அவரை அரசியலுக்கு அழைத்தவண்ணம் உள்ளனர். இதையடுத்து, தன் ஆதரவாளர்களை சென்னைக்கு வரும்படி தீபா அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுடன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தீவிர ஆலோசனை நடத்த இருக்கிறார். இதன் முதல்கட்டமாக இன்று மாலை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தீபாவுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஈரோட்டில் கட்சி
ஈரோட்டில்தான், முதல் முறையாக, தீபா பெயரில் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இரட்டை ரோஜா சின்னம், கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற கொடியை அறிமுகம் செய்து, தீபாவை பொது செயலராக முன் மொழிந்து, ஐந்து தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டுள்ளன.
நிர்வாகிகள் வருகை
இந்த தீர்மானங்களை, தீபாவிடம் ஒப்படைத்து, புதிய கட்சிக்கு தலைமையேற்க வேண்டும் என, அழைப்பு விடுக்கவும், தீபாவை நேரில் சந்திக்கவும், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சென்னை வந்துள்ளனர்.
பல ஊர்கள்
இதேபோல, மேலும், பல ஊர்களில் இருந்தும் ஆதரவாளர்கள் சென்னைக்கு அழைக்கப் பட்டுள்ளனர். அவர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை நடத்திய பின், எம்.ஜி.ஆர். பிறந்த நாள் அன்று, அதாவது வரும் 17ம் தேதி, தீபா தனது முடிவை அறிவிக்க உள்ளார்.