ஓபிஎஸ்-க்கு ஜெ. அண்ணன் மகன் தீபக் திடீர் ஆதரவு! டிடிவி தினகரனுக்கு எதிராக போர்க்கொடி!
ஜெயலலிதா அண்ணன் மகன் தீபன் திடீரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன், வெங்கடேஷுக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்குதான் அதிமுகவுக்கு தலைமை ஏற்கும் தகுதி உள்ளதாக ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் டிடிவி தினகரன் தலைமையை தம்மால் ஏற்க முடியாது; அதிமுகவுக்கு தலைமை ஏற்கும் தகுதி தினகரனுக்கு இல்லை எனவும் தீபக் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த போது சசிகலாவுடன் சேர்ந்து தீபக்தான் மெரினா கடற்கரையில் இறுதி சடங்குகள் செய்தார். சசிகலாவையும் தீபக் அத்தை என்றே அழைத்து வந்தார்.
சசிகலா தலைமைக்கு தீபக்கின் சகோதரி தீபா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனாலும் தீபக் சசிகலா முகாமிலேயே இருந்து வந்தார்.
டிடிவி தினகரன்
தற்போது சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதால் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெங்களூரு சிறைக்கு போவதற்கு முன்னதாக அதிமுக துணைப் பொதுச்செயலராக அக்காள் மகன் டிடிவி தினகரனை நியமித்தார் சசிகலா.
தீபக் எதிர்ப்பு
இன்றுதான் அதிமுகவின் துணை பொதுச்செயலராக டிடிவி தினகரன் பொறுப்பேற்றார். இந்த நிலையில் சசிகலா முகாமில் இருந்த தீபக் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார்.
விசாரணை கமிஷன்
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தீபக் இன்று கூறியதாவது: ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அதிமுகவுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திரும்பி வருவார்.
ஓபிஎஸ்-க்குதான் தகுதி
ஓ. பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே அதிமுகவுக்கு தலைமை ஏற்கும் தகுதி இருக்கிறது. டி.டி.வி. தினகரன் தலைமையை தம்மால் ஏற்க முடியாது.
தினகரனுக்கு தகுதி இல்லை
டிடிவி தினகரன் மற்றும் வெங்கடேஷால் அதிமுகவை வழிநடத்த முடியாது. அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு டிடிவி தினகரன் தகுதியானவர் அல்ல.
இவ்வாறு தீபக் கூறியுள்ளார்.