திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: நவ.17ல் மகாதீபம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் தீப திருவிழாவிற்கான கொடியேற்று விழா இன்று காலை வெகு விமரிசையாகத் தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழா 10 நாள் நடைபெறுகிறது. நவம்பர் 17 ஆம் தேதி முக்கிய திருவிழாவான பரணி தீபமும், அண்ணாமலையார் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட இருக்கிறது.
இந்த தீப விழாவிற்காக, இன்று காலை நாதஸ்வரம் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓதினார்கள். சரியாக காலை 6.10 மணிக்கு வைத்தியநாத குருக்கள், பக்தர்களின் அரோகரா கோஷத்திற்கிடையே கோயிலின் தங்க கொடிமரத்தில் தீப திருவிழாவிற்கான கொடியை ஏற்றி வைத்தார்.
அக்னி ஸ்தலம்
சிவபெருமானின் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் திகழ்கிறது. இக் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது கார்த்திகை தீபத் திருவிழா. இவ் விழாவைக் காண உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவது வழக்கம்.
எல்லை தெய்வங்கள்
கார்த்திகை தீபத் திருவிழாவின் முன்னோட்டமாக, நவம்பர் 5ம் தேதி செவ்வாய் இரவு துர்க்கையம்மன் வழிபாடு, புதன்கிழமை பிடாரியம்மன் வழிபாடுகள் நடைபெற்றன.
விநாயகர் உற்சவம்
வியாழக்கிழமை இரவு விநாயகர் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கண்ணாடி விமானத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது
பக்தர்கள் பரவசம்
இன்று நடைபெற்ற கொடியேற்றத்தின் போது ஆயிரக்கணக்கானோர் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டனர்.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. முருகன், நகரமன்ற தலைவர் பாலச்சந்தர், கோயில் இணை ஆணையர் திருமகள் உட்பட பல்லாயிரக்கணக்கான அண்ணாமலை பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
63 நாயன்மார்கள் உலா
மூன்றாம் நாளான நவம்பர் 10-ம் தேதி 1008 சங்காபிஷேகம், ஆறாம் நாளான நவம்பர் 13-ம் தேதி 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெறுகிறது.
தேரோட்டம்
விழாவின் 7-வது நாளான நவம்பர் 14-ம் தேதி பஞ்ச ரதங்கள் வீதியுலா நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 5.05 மணி முதல் 5.45 மணிக்குள் தொடங்கும் தேரோட்டம் அன்றிரவு முடிவடைகிறது.
விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் தேர்கள் என 5 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும் கண்கொள்ளாக் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
பரணி, மகா தீபம்:
10-ம் நாளான நவம்பர் 17-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
3 நாள் தெப்ப உற்சவம்
தொடர்ந்து, நவம்பர் 18, 19, 20-ம் தேதிகளில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. நவம்பர் 21-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ந.திருமகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.