கங்கைகொண்டானில் ஊருக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தும் மான்கள் - விவசாயிகள் கவலை
நெல்லை: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் வனப் பூங்காவில் இருந்து வெளியேறும் மான்கள் ஊருக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் வனத்துறை சார்பில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் மான் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு 10 புள்ளி மான்கள் வளர்க்கப்பட்டன.

பெருகிய எண்ணிக்கை:
இவை பெருகி 2002 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 156 புள்ளி மான்களும், 2004 இல் 185 புள்ளி மான்களும் இருந்தன. தற்போது சுமார் 400 புள்ளி மான்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கருவேல மரங்கள் நிறைந்த பூங்காவில் மான்களுக்கு தேவையான தீவணங்கள் கிடைக்கவில்லை.

தீவனங்கள் பற்றாக்குறை:
இதனால் அங்கு 5 ஏக்கர் பரப்பளவில் தீவன புல் வளர்க்கப்பட்டது. 2 குடி நீர் தொட்டிகளும் திறக்கப்பட்டன. இது மான்களுக்கு போதுமானதாக இல்லை.

வேலிகளும் பழுது:
போதிய பராமரிப்பும் இல்லாததால் பூங்காகாவை சுற்றி இருந்த வேலிகளும் பழுதடைந்து இருந்தன. இதனால் இரை தேடி மான்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஊருக்குள் புக ஆரம்பித்தன.

ஊருக்குள் நுழையும் மான்கள்:
மானூர், தாழையூத்து, பாலாமடை,கட்டளை, உதயநேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தஞ்சம் அடைகின்றன. மேலும் தண்ணீர் தேடி அலையும் மான்கள் கிணறுகளில் விழுந்து இறந்து போகின்றன. சாலையில் கடக்கும் போது வாகனங்களில் அடிபடுகின்றன. வெளியில் வரும் மான்கள் சில பேர் வேட்டையாடுவதும் தொடர்கிறது.

வாழைகளை சேதமாக்கும் மான்கள்:
இப்படி 1 வருடத்தில் 50க்கும் மேற்பட்ட மான்கள் இறந்து போய் விட்டதாக கூறப்படுகிறது. கங்கை கொண்டானில் இருந்து வெளியேறும் மான்கள் அருகில் உள்ள மணிமூர்த்திஸ்வரம் பகுதியில் தஞ்சமடைந்து இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து அங்குள்ள வாழைகளை பதம் பார்த்து வருகின்றன.

நடவடிக்கை தேவை:
இதனால் அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications