டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. சென்னை வானிலை மையம் வார்னிங்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கர் விளை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வானிலை மையம் தகவல்
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மைய அதிகாரி பாகுலேயன் தம்பி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.
பரவலாக மழை பெய்யும்
அப்போது பேசிய அவர் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையான மன்னார் வளைகுடாவில் இருந்து வடதமிழகம் வரை நீடிப்பதாக தெரிவித்தார். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
டெல்டா மாவட்டங்களில் கனமழை
டெல்டா, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மைய அதிகாரி தெரிவித்தார். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.