காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டெல்டாவில் 19-ல் 'பந்த்' - மதிமுக ஆதரவு
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டெல்டாவில் வரும் 19-ந் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி நதி நீர் பிரச்சினையில் நடுவர் மன்றம் பிப்ரவரி 5, 2007-ல் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. இதை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, உடனே அரசிதழில் வெளியிடாமல் ஆறு ஆண்டு காலம் தாமதமாக்கி, பிப்ரவரி 19, 2013-ல்தான் வெளியிட்டது.
நடுவர் மன்ற உத்தரவை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இறுதி தீர்ப்பில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டது. அதன்படி மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய இரு அமைப்புகளை உருவாக்கி இருந்தால், காவிரி நீரைத் தேக்கி வைக்க கர்நாடகத்தில் கட்டப்பெற்ற கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகள் காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கும்.

காங்கிரஸின் துரோகம்
தமிழகத்தின் தண்ணீர் தேவையைக் கருத்தில் கொண்டு, கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீரைத் திறந்துவிட ஒழுங்குமுறைக் குழு நடவடிக்கை எடுத்திருக்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கண்ட அமைப்புகளை உருவாக்காமல், தமிழத்திற்குத் துரோகம் இழைத்தது.

தமிழக அரசு வழக்கு
இந்தப் பின்னணியில்தான் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது.

பாஜகவும் துரோகம்
2014-ல் பா.ஜ.க. அரசு பொறுப்புக்கு வந்த பின்னரும் இதுவரை மேற்கண்ட இரு நிர்வாக அமைப்புகளை உருவாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆண்டுதோறும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு வழியில்லாமல், காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயத் தொழில் நலிவடைந்து வருகிறது.

5 ஆண்டுகளாக குறுவை இல்லை
மேலும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குறுவை சாகுபடி முற்றிலும் நின்றுபோய் இருக்கிறது. ஒரு போக சம்பா சாகுபடியும் கேள்விக்குறி ஆகிவிட்டது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வருவாய் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

டெல்டா பந்த்
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வலியுறுத்தியும், காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டக் கோரியும், ஆகஸ்டு 19-ந் தேதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தவும், சாலை மறியல் அறப்போர் நடத்தவும், தமிழ்நாடு விவசாய சங்கமும், விவசாயத் தொழிலாளர் சங்கமும் அறைகூவல் விடுத்துள்ளன.

மதிமுக முழு ஆதரவு
தமிழ்நாட்டின் இன்றியமையாத காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காண முழு அடைப்புப் போராட்டத்திற்கு ம.தி.மு.க. முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. கழகத் தோழர்களும், விவசாய அணியினரும் அறப்போரில் பங்கேற்கக் கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களும், வர்த்தக பெரு மக்களும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டுகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications