1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் போனதால் பிறந்தநாளில் கைதானாரா மதன்?
காசிக்கு போய் ஜலசமாதியாகப் போவதாக கூறிய வேந்தர் மூவிஸ் அதிபர் மதன், 6 மாத தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அவரது 44வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஆறு மாதகாலமாக தலைமறைவாக இருந்து போலீசை ஏமாற்றி வந்த மதன், தன்னிடம் இருந்த பணம் முழுவதும் செல்லாமல் போனதாலேயே செலவிற்கு காசில்லாமல் போனதாகவும், வேறு வழியின்றி போலீசில் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்.ஆர்.எம் உள்ளிட்ட பல மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்து விடும் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தார் மதன். பலகோடி பணம் புழங்கவே திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார்.
திமுக ஆட்சி முடிவுக்கு வந்து அதிமுக ஆட்சி தொடங்கிய கடந்த 2011 ம் ஆண்டு மதனின் திரை உலக வாழ்க்கை தொடங்கியது. 'வேந்தர் மூவிஸ்' என்ற சினிமா கம்பெனியைத் தொடங்கினார்.
தில்லுமுல்லு, புலிப்பார்வை, பாயும் புலி, அரவான், ராட்டினம், சகுனி, பாகன், வன யுத்தம், கௌரவம், குட்டி புலி, எதிர்நீச்சல், தலைவா, லிங்கா, சுட்ட கதை, நாடோடி மன்னன், ஆரம்பம், பாண்டியநாடு, ஈகோ, நான் சிகப்பு மனிதன், உயிருக்கு உயிராக,சண்டியர், பொறியாளன்,பூஜை என்று பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்தும், விநியோகித்தும் ,வெளியீடு செய்தார்.
பல திரைப்படங்கள் ப்ளாப் ஆனது. மாணவர்களிடம் சீட் பெற்று தருவதாக வசூலித்த பணமும் சினிமாவில் கரைந்து போனது. நீட் விவகாரம் தலையெடுக்கவே நீட் ஆக கம்பி நீட்டினார் மதன். இந்தக் கல்வியாண்டில் எஸ்.ஆர்.எம். மற்றும் பிற கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமான பெற்றோர்களிடம் பல கோடி ரூபாய் மதன் சுருட்டியுள்ளார் என்று புகார்கள் கிளம்பின.

காவல்நிலையத்தில் புகார்கள்
மதனை கண்டுபிடிக்கும்படி அவரது மனைவிகள் சிந்து, சுபலதா ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
மதன் மீது ஏற்கனவே எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. மதன் உயிரோடுதான் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. அவர் வெளிநாடு தப்பி விட்டதாகவும் வதந்திகள் பரவின.

ஆட்கொணர்வு மனு
தலைமறைவு ஆன சினிமா பட அதிபர் மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். மதனின் கூட்டாளிகள் சுதிர், குணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மதனின் தாயார் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மதனை கண்டுபிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வரணாசியில் மதனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

ஊர் ஊராக சுற்றிய மதன்
வாரணாசி, ரிஷிகேஷ், மணிப்பூர், திருப்பூர் என ஊர் ஊராக சுற்றினார் மதன். மதனை கண்டுபிடிக்க உயர்நீதிமன்றத்தில் பலமுறை அவகாசம் கேட்டனர் தற்போது தனிப்படை போலீசாரால் மணிப்பூரில் இருந்து திருப்பூருக்கு வந்த மதன் தனது 44வது பிறந்தநாளில் போலீசிடம் பிடிபட்டுள்ளார்.

பணம் என்னவானது?
மதன் மாயமானபோது தன்னுடன் பல கோடி ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. அனைத்துமே ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்தான். கடந்த 6 மாதகாலமாக மதன் பல ஊர்களில் சுற்றித் திரிந்துள்ளார். கடந்த 13 தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி ஆயிரம், 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தார். இது பலரது தலையில் இடியாக இறங்கியது. செல்லாத நோட்டுக்களை கையில் வைத்திருந்த மதன் சில நாட்களாக செலவுக்குக் கூட பணமின்றி தவித்ததாகவும், இனியும் பணமில்லாமல் தலைமறைவாக வாழ முடியாது என்ற நிலையிலேயே போலீசிடம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. மதனை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த பணத்தைப் பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications