தமிழகத்தில் ரூ. 37 லட்சம், குஜராத்தில் 400 கோடி பணம் பறிமுதல்
தமிழகத்தில் ரூ. 37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்துள்ளது.
ஈரோடு அருகே கோபிசெட்டிபாளையம்-முடிச்சூர் ரோடு அருகே சென்று கொண்டடிருந்த ஒரு காரை வழிமறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தக் காரில் ஒரு துணியால் கட்டி வைக்கப்பட்டு இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, காரில் இருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் சக்திவேல், சுரேஷ், மனோஜ், செந்தில்குமார் மற்று சபரி என்பது தெரிய வந்துள்ளது.
கோபிசெட்டிபாளையத்தில் மிக முக்கிய பிரமுகர் ஒருவருக்கு பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு கொண்டு சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து கார், பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல் குஜராத் மாநிலம் சூரத்தில் பைனான்சியர் கிஷோரிடம் ரூ.400 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கக்கட்டிகள், சொத்து ஆவணங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த பின்னர் கள்ள நோட்டுக்கள், கறுப்பு பணம் பதுக்கியவர்களை குறிவைத்து போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். பல நூறு கோடி ரூபாய் பணமும், தங்கக்கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.