பழைய நோட்டுக்களை மாற்ற இனியும் தொடரக் கூடாது துயரம்... புதிய வங்கிகளைத் தொடங்க விஜயகாந்த் கோரிக்கை
பழைய ரூபாய் நோட்டுக்களை மக்கள் மாற்றுவதற்கு ஏற்ப புதிய வங்கிகளைத் தொடங்க விஜயகாந்த் கோரியுள்ளார்.
சென்னை: எல்லா பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமே செய்ய வேண்டும் என்பதால் புதிய வங்கிகளை தொடங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் மக்கள் ஈட்டிய பணத்தை பாதுகாப்பாக இருக்க வங்கிகளில் செலுத்தி தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறார்கள். தனியார் வங்கிகள், அரசு வங்கிகள் போல் செயல்படுகின்றனர்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அலுவலர்களின் மாதசம்பளம், ஓய்வு ஊதியம், பணப் பயன்கள், அனைத்தும் தற்போது வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. சிறு, பெரு வணிகர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் வங்கிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்கிறார்கள். முன்பு தமிழக அரசு கருவூலங்களில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதை வங்கிகளுக்கு மாற்றப்பட்டது.
மக்கள் தேவைக்கு ஏற்ப வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை, அரசு வங்கிகள், தனியார் வங்கிகளில் போதுமான பணியாளர்கள், அலுவலர்கள் இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ரூபாய் 500, 1000 பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுக்கள் வாங்க மக்கள் படும் துயரங்கள் இனியும் தொடரக்கூடாது.
எல்லா பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலம் தான் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்கிற நிலையில், தற்போதுள்ள வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனால் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூடுதலாக புதிய வங்கிகளை நிறுவிடவேண்டும். மேலும் வங்கிகளில் கூடுதலாக அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications