கைவிரிக்கும் வங்கிகள்... செயல்படாத ஏடிஎம்கள்... அல்லாடும் மக்கள்!
சென்னை: உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளான ரூ 500, 1000 செல்லாது என அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த பிறகும் மக்கள் பணத்துக்காக வங்கிகள், ஏடிஎம்கள் என அலையும் நிலை தொடர்கிறது.
குறிப்பாக திங்கள் கிழமை நிலைமை படு மோசமாகிவிட்டது.
எந்த வங்கியிலும் போதிய பணமில்லை. நாட்டின் 99 சதவீத ஏடிஎம்கள் செயல்படவில்லை. பல ஏடிஎம்கள் முழுவதுமாக மூடப்பட்டுக் கிடந்தன.

வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நிர்ணயிக்கப்பட்டதைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பணம் வழங்கப்பட்டது.
குறிப்பாக, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்றவற்றில் வாடிக்கையாளர்களின் வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து அதிகபட்சம் ரூ.5,000 மட்டுமே அளிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கிக்கு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன. இதனால், வங்கிக் கிளைகளுக்கு பணம் விநியோகம் செய்யப்படவில்லை.
போர்க்கால அடிப்படையில் வங்கிகள் செயல்படும், டிசம்பர் 31 வரை சனி, ஞாயிறுகளில் விடுமுறையே கிடையாது என அறிவிக்கப்பட்டாலும், அதெல்லாம் வெறும் அறிவிப்பாகவே போய்விட்டது.
சனி, ஞாயிறு விடுமுறை என்ற காரணத்தைக் காட்டித்தான் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பவில்லை. திங்களன்று நள்ளிரவு வரை ஒவ்வொரு ஏ.டி.எம் மையமாக பொது மக்கள் தேடி அலைந்தனர்.
திங்கள்கிழமை காலை வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பலர் காசோலைகளை நிரப்பி வங்கிக் கிளைகளில் கொடுத்த போது அவர்களுக்கு கேட்ட பணம் கிடைக்கவில்லை. அதிகபட்சம் ரூ 5000 மட்டும்தான் வழங்கப்பட்டது. காசோலைகள் ரூ 24 ஆயிரம் வரை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று, நடப்புக் கணக்கு, மேல் வரை கணக்கு ('ஓவர் டிராப்ட்') உள்ளிட்ட இதர கணக்கு வைத்துள்ளோருக்கு அதிகபட்சம் ரூ.10,000 மட்டுமே அளிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் பலரும் கடும் அதிருப்தி ஆவேசத்துடன் திட்டிக் கொண்டு சென்றதைப் பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications