55 நாளுக்கு மேல் ஆச்சே... பணப்பஞ்சம் தீரலையே!!... அலையவிட்ட டெபிட் கார்டு
மோடி அறிவித்த ரொக்கமில்லா பண பரிவர்த்தனை 55 நாட்களக்கு மேலாக மக்களை பாடாய் படுத்தி எடுக்கிறது. சம்பளப்பணத்தை எடுக்க முடியாமல் தவியாக தவித்து வருகின்றனர்.
சென்னை: கையில் காசு வேண்டாம், கார்டு போதும் என்று பிரதமர் சொன்னாலும் சொன்னார், அட இதுவும் நல்லதிற்குத்தானே என்று பலரும் ஆதரவு தெரிவித்தனர். நானும் தேச பக்தர்கள் வரிசையில் இணைந்தேன்.
கையில் பணத்தை பேங்கில் டெபாசிட் செய்து விட்டு செக் போட்டு 20000 ரூபாயை எடுத்த போது கஷ்டம் தெரியவில்லை. ஏடிஎம் வரிசையில் நின்று 2000 ரூபாய் பணம் எடுத்த போது கூட அவ்வளவாக கஷ்டப்படவில்லை. 2016 என்பது பணக்கஷ்டம் இல்லாத ஆண்டாகவே அமைந்தது.
2017ம் ஆண்டு புதிதாக பிறக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்தால் வந்தது பாருங்க ஒரு கஷ்டம்... எப்பவுமே இப்படி ஒரு சிக்கலோ, பிரச்சினையோ வந்ததில்லை.

பதற்றமும், பரபரப்பும்
2016 நவம்பர் 8ஆம் தேதி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று டிவியில் பேசிய மோடி கூலாக அறிவித்தார். அப்போதே நெஞ்சில் இடி இறங்கியது. ஏனென்றால் அந்த மாத சம்பள பணத்தை அப்போதுதான் எடுத்திருந்தேன். இரவோடு இரவாக ஏடிஎம்மில் பலரும் வரிசையில் நிற்க, ஆனாலும் கவலையின்றி அசால்டாகவே இருந்தேன் நான். வீட்டு வாடகையை பழைய நோட்டாகவே வாங்கிக் கொள்வதாக வீட்டு ஓனர் கூறவே, பதற்றம் தணிந்தது.

புதிய நோட்டுக்கள்
புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை அறிமுகம் செய்தது. நவம்பர் 10ஆம் தேதி முதல் தங்களிடமிருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் குவிந்தனர். மேலும் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது கூட எனக்கு கஷ்டமில்லை. எளிதாகவே பணம் கையில் புரண்டது.

பணப்பஞ்சம்
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பினார் நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு உருவானது. கடந்த மாதம் சம்பள பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். நான் செக் போட்டு 20000 பணம் எடுத்து சமாளித்தேன். எல்லாம் 2000 ரூபாய் நோட்டுக்கள்தான் கிடைத்தது. 2016ம் ஆண்டு முடியும் வரை புது 500 ரூபாய் நோட்டுக்களை கண்களால் கூட பார்க்க முடியவில்லை.

ஏடிஎம்களில் பணம்
பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு டிசம்பர் 30ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. சென்னையில் மூடப்பட்ட பல ஏடிஎம்கள் உயிரற்ற நிலையிலேயே இருக்கின்றன. பொதுமக்களிடம் போதிய அளவில் பணப்புழக்கம் வரவில்லை. அதே நேரத்தில் நெல்லை, திருச்செந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏடிஎம்கள் திறந்திருந்தன. எளிதாக பணம் எடுக்க முடிந்தது.

தீராத வரிசை
டிசம்பர் மாத சம்பளம் போட்டு விட்டனர். 2வது மாதமாக தற்போதும், அரசு ஊழியர்கள், மாத ஊழியர்கள் சம்பள பணத்தை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான ஏடிஎம்கள் மூடிய நிலையில் இருப்பதால், மக்கள் பணத் தேவையை பூர்த்தி செய்யாமல் தவிக்கின்றனர். திருமங்கலத்தில் மெயின் ரோட்டில் இருந்த ஏடிஎம்கள் எல்லாம் மூடியே கிடந்தன. ஒரே ஒரு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஏடிஎம்மில் கூட்டம் காத்திருந்தது.

நோ கார்டு ஒன்லி கேஷ்
பிச்சைக்காரர் கூட ஸ்வைப் மிசின் வைத்திருக்கிறார் என்று மோடி சொன்னாலும் திருமங்கலம் வாசிகள் இன்னமும் மாறவில்லை. மிகப்பெரிய ஹோட்டல்களில் போய் ஆர்டர் செய்து விட்டு டெபிட் கார்டை நீட்டினால் கூட ஒன்லி கேஷ் நோ கார்டு என்கின்றனர். அடடா இன்றைக்கு கொலை பட்னிதான் என்று எண்ணிக்கொண்டவாறு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். சென்னையில் கூட கஷ்டப்பட்டதில்லையே திருமங்கலத்தில் ஏன் இப்படி ஒரு கஷ்டம் என்றவாரே பயணம் செய்தேன்.

கண்டேன் பணத்தை
திருமங்கலம் நகரம் முடியும் இடத்தில் விருதுநகர் செல்லும் சாலையில் ஒதுக்குப் புறமாக ஏடிஎம் இருந்தது. எஸ்பிஐ வங்கி ஏடிஎம் வழக்கம் போல பல்லை காட்டியது. யூனியன் வங்கி ஏடிஎம் பணத்தை துப்பியது. அதுவும் 500 ரூபாய் நோட்டுக்களாக 8 நோட்டுக்களையும், 5 நூறு ரூபாய் நோட்டுக்களையும் கொடுத்தது. கண்டேன் பணத்தை என்று கத்தலாம் போல இருந்தது. இது மாதிரி ஒரு நிலை இனி எப்போது வரக்கூடாது என்று எண்ணியவாறே வீடு வந்து சேர்ந்தேன்.












Click it and Unblock the Notifications