பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளுக்கு எதிராக தொடர் போராட்டம்.. கிராம மக்கள் அதிரடி!
பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு: வரும் 26-ம் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 50 க்கும் மேற்பட்ட சாய சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து ஒரு சொட்டு கழிவு நீர்கூட வெளியேற்ற கூடாது என்பது நீதிமன்ற உத்தரவு. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத தொழிற்சாலைகள் இரவு நேரங்களில் கழிவு நீரை திறந்து விடுகின்றனர் என்பது பொது மக்களின் புகார்.
மேலும் ஆழ்துளாய் கிணறுகளில் இந்த கழிவுநீரை விடுவதால் சிப்காட்டை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள நீரை கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளதோடு பொதுமக்களுக்கும் புற்றுநோய், சுவாசகோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிகளிடம் பலமுறை மனு அளித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கம்.
இந்தநிலையில் சிப்காட்டை சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நலச்சங்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் சிப்காட் தொழிற்சாலைகளை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன் முதற்கட்டமாக வரும் 26-ம் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்களின் இந்த முடிவு தொழிற்சாலை உரிமையாளர்கள் கலக்கமடைய செய்துள்ளது.