மர்மக்காய்ச்சல்: சென்னை, திருவள்ளூரிர் ஒரேநாளில் 7 பேர் பலி – தர்மபுரியில் பெண் பலி
சென்னை: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த ஏழு பேர், ஒரேநாளில் இறந்துள்ளனர். டெங்கு பாதிப்பு காரணமாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
தாம்பரம் முடிச்சூர், கொம்பியம்மன் நகரைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரின் மகள் ஆயிஷா, 5. காய்ச்சலால், சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தாம்பரம் முடிச்சூர், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் அப்துல் ஜாகிர், 38. கடும் காய்ச்சலால் சென்னை, அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார். நேற்று காலை திடீரென உயிரிழந்தார்.

சிறுவன் மரணம்
திருவொற்றியூர், சரஸ்வதி நகர், 18வது தெருவைச் சேர்ந்தவர் போதகானந்தன்; கால்டாக்சி ஓட்டுனர். அவர் மகன் ஹரிஹரன், 4, கடந்த நான்கு நாட்களாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று மதியம், சிகிச்சை பலனின்றி இறந்தார். போதகானந்தனின் மற்றொரு மகன் கார்த்திகேயன், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குழந்தை பலி
திருவள்ளூர் மாவட்டம், வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர், கேசவன் மனைவி வித்யா. அவர் தன், 10 மாத ஆண் குழந்தையான வருணுடன், கடந்த ஒரு வாரமாக, எல்.என் கண்டிகையில் உள்ள, தாய் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருண் இறந்தான்.
திருத்தணியில் பரவும் காய்ச்சல்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சிக்கு உட்பட்ட, தாடூர், மேட்டுக் காலனி, பள்ளக் காலனி மற்றும் எல்.என்.கண்டிகை ஆகிய பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, நூற்றுக்கும் மேற்பட்டோர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருத்தணியில் தனியார், அரசு மருத்துவமனைகளிலும், பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் பலி உயர்வு
கடந்த இரண்டு மாதங்களில், சென்னையில் மட்டும், டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு, 1௦க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
500 பேர் பாதிப்பு
தர்மபுரி மாவட்டம், கன்னிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள்(60). இவருக்கு, கடந்த இரண்டு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது. சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே லட்சுமிஅம்மாள் உயிரிழந்தார். அதே கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications