சென்னையில் தொடரும் டெங்கு பலி- மக்களை காப்பாற்றாமல் தம்மை பாதுகாக்க மட்டும் போராடும் தமிழக அரசு!
சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 சிறுவர்கள் பலியாகி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: டெங்கு காய்ச்சலுக்கு சென்னையில் மேலும் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னை நகரில் மட்டும் 900 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசோ தம்மை காப்பாற்றிக் கொள்வதில்தான் பெரும் முனைப்பாக இருப்பது மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
நாட்டில் கேரளாவை அடுத்து டெங்குவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம்தான். கடந்த ஜனவரி முதல் 7,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வமாக 16 பேர் பலி என்று அரசு அறிவித்தாலும் இந்த எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும் என்பதுதான் யதார்த்தம்.

அடுத்தடுத்து பலி
சென்னையில் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமாரின் 8 வயது மகன் கிரித்திக் ராம் நேற்று டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். அதற்கு முன்னர் டிஏவி பள்ளி மாணவர் பார்கவ் டெங்குவுக்கு பலியானார்.

சென்னையில் பீதி
தொடரும் டெங்கு காய்ச்சல் பலியால் சென்னையில் பீதி நிலவுகிறது. அதேநேரத்தில் அரசு தரப்பில் டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம் என வெற்று அறிவிப்புதான் வருகிறது.

எதில் மும்முரம்?
மருத்துவமனைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை அகற்ற வேண்டியதுதான் தமிழக அரசின் முதன்மை பணி. ஆனால் தமிழக அரசைப் பொறுத்தவரையில் தம்மை காப்பாற்றிக் கொள்ளத்தான் போர்க்கால அடிப்படையில் வியூகம் வகுக்கிறது.

தொடரும் அச்சம்
டெங்கு போன்ற மனித உயிர்களை பலிஎடுக்கும் நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற எந்த ஒரு போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளும் இல்லை. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications