அதி வேகமாகப் பரவும் டெங்கு, மர்ம காய்ச்சல்: திருவள்ளூர் ஜி.எச்சில் 102 பேர் அனுமதி
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 102 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 8 பேர் டெங்கு காய்ச்சலாலும், மற்றவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 87 பேர் அனுதிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 7 மணி அளவில் 99 பேராக உயர்ந்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி 102 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் அருந்ததியர் காலனியில் கடந்த 13ஆம் தேதி யுவராஜ் என்ற 6 வயது சிறுவனும், கடந்த 18ஆம் தேதி சந்தோஷ் என்ற சிறுவனும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன் மற்றும் மோகன் குமார் என்ற சிறுவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் திருத்தணியை சேர்ந்த ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் பல இடங்களில் தண்ணீர் வெளியேற முறையான வடிகால் இன்றி தேங்கி நிற்கிறது. மாவட்டத்தின் பல ஊர்களில் தெருக்கள் சகதியாக மாறி சேற்றுக்குட்டை போல் காட்சியளிக்கிறது. இது கொசு உற்பத்திக்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளது.
இதனால், இம்மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். டெங்கு குறித்து நடத்தப்படும் விழிப்புணர்வு முகாம், தடுப்பு நடவடிக்கை அனைத்தும் சம்பிரதாயத்திற்கு நடத்தப்படுவதாகவே உள்ளது.
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தவண்ணம் உள்ளனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று 87 பேர் அனுதிக்கப்பட்டுள்ளதாக நிலையில், இரவு 7 மணி அளவில் 99 பேராக உயர்ந்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி 102 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் குவிந்து வருவதால் பொதுமக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.