காரைக்குடி பள்ளிகளில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ஆய்வு
காரைக்குடியில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ஆய்வு நடத்தி மாணவர்களின் கல்வித் திறனை பரிசோதித்தார்.
காரைக்குடியில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ஆய்வு நடத்தி மாணவர்களின் கல்வித் திறனை பரிசோதித்தார்.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செல்வகுமார் ஆய்வு செய்தார்.
காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, மு.விஅரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாணவர் கல்வி மேலாண்மை புள்ளி விபர பதிவேற்றம் (EMIS),ஆதார் கார்டு பெற்றுள்ள மாணவர்கள் விபரம் குறித்து கேட்டறிந்தார். காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்களால் நடத்தப்பட்ட மலர்க் கொத்து கண்காட்சியை பார்வையிட்டார்.
எட்டாம் வகுப்பு மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்பு திறனை ஒவ்வொரு மாணவராக வாசிக்க சொல்லி ஆய்வு செய்தார். பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பற்றியும் நடப்பு கல்வி ஆண்டில் காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி ஆகியவை குறித்து பாட வாரியாக ஆய்வு செய்தார்.
பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் செய்யும் முயற்சிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாணவர்களுடைய இலக்குகள் குறித்தும் அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ள மதிப்பெண்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
2016-2017 ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பள்ளியில் உள்ள கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு கழிப்பறை சுத்தம் செய்யப்படுதல் குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் மற்றும் தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.