சசிகலா புஷ்பா ராஜினாமா... தூத்துக்குடி மேயர் பொறுப்பை ஏற்றார் துணை மேயர் சேவியர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்து வந்த சசிகலா புஷ்பா, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடவுள்ளதால் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மேயர் பொறுப்பை துணைமேயர் சேவியர் ஏற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக இருந்த சசிகலா புஷ்பா அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று மாலை தான் வகித்து வந்த தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் பதவியை சசிகலா புஷ்பா ராஜினாமா செய்தார். இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சியின் அவசரக் கூட்டம் இன்று மதியம் மாநகராட்சி ஆணையர் மதுமதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பாவின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக (பொறுப்பு) துணை மேயர் சேவியர் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த சின்னத்துரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இன்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரவிக்குமார் தலைமையில், மாவட்ட ஊராட்சிமன்ற உறுப்பினர்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்த சின்னத்துரையின் ராஜினாமா ஏற்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட பஞ்சாயத்தின் துணைத்தலைவராக இருந்த தெய்வேந்திரன் ஊராட்சி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.












Click it and Unblock the Notifications