வாக்குச்சாவடி முன் பிரசாரம்… கண்டு கொள்ளாத அதிகாரிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்களிக்க வந்த பொதுமக்களிடம் வாக்கு சாவடி முன்பு அதிமுகவினர் பிரச்சாரம் செய்தாக கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருந்தது மற்ற கட்சியினரை கொதிப்படைய வைத்தது
பணப்பட்டுவாடா
தூத்துக்குடி தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வாக்காளர்களுக்கு பல்வேறு வழிகளில் பணம் வழங்கப்பட்டது. அரசு உயர் அதிகாரிகள் கூட சுய உதவி பெண்களை கூட்டம் என்று கூறி வரவழைத்து அவர்களுக்கு கடன் உதவி, மானியம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
மேலும் அதற்கு பிரதி பலனாக குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை ஆளும்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கலெக்டர் தலைமையில்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள பிரபல ஓட்டலில் கலெக்டர் தலைமையிலேயே இது போன்ற ஒரு பிரச்சார கூட்டம் நடந்துள்ளது.
ஆனால் அதிகாரிகளோ, உளவுதுறையினரோ இதை கண்டு கொள்ளவில்லை. மேலும் வாக்கு பதிவுக்கு முதல் நாள் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பண பட்டுவாடா செய்துள்ளனர். இதனை பல்வேறு கட்சியினர் வீடியோ பதிவு செய்து பறக்கும் படையினரிடம் புகார் தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிகாரிகள் சுத்தமாக கண்டுகொள்ளாமல் குறட்டை விட்டதால் வாக்கு பதிவு நாளான நேற்று அதிகாலை முதலே வாக்கு பதிவு மையங்கள் முன்பு நின்று கொண்டு வாக்களிக்க வருபவர்களிடம் இரண்டு விரல்களை காட்டி கடைசி நேர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து எதுவும் தெரியாதது போல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் செல்போனில் சுவராசியமாக பேசி கொண்டிருந்தனர். விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும் மாவட்டத்தின் பெரும்பாலான டாஸ்மாக் பார்களிலும், அவற்றின் அருகே உள்ள சிறிய கடைகளிலும் மதுபானங்கள் விற்பனை கனஜோராக நடந்தது. இதையும் அதிகாரிகளோ, போலீசாரோ கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications