தற்கொலைக்கு முயற்சித்ததைத் தொடர்ந்தே அமெரிக்க கப்பல் பொறியாளர் கைது!
தூத்துக்குடி: அமெரிக்க கப்பலின் தலைமைப் பொறியாளரான உக்ரைனைச் சேர்ந்த சிடோரன் கோவலரி, கப்பலில் தற்கொலைக்கு முயற்சித்துள்ள விஷயம் வெளியில் வந்துள்ளது. அவரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்திக் காத்துள்ளனர்.
அமெரிக்க தனியார் நிறுவனத்தின் பாதுகாப்புக் கப்பலான எம்.வி. சீமன் கார்ட் ஓஹியோ, தூத்துக்குடி அருகே அத்துமீறி இந்திய பகுதிக்குள் வந்தது தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலில் இருந்த 35 பேரையும் தமிழக கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். முதலில் 33 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு கப்பலை வி்ட்டு அகற்றப்பட்டனர். கேப்டன் டுட்னிக் வாலரின், தலைமைப் பொறியாளர் கோவலரி ஆகியோர் மட்டும் பராமரிப்புக்காக விட்டு வைக்கப்பட்டனர்.
கப்பலில் பாதுகாப்புக்காக மத்திய தொழிலக படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கோவலரி, கப்பலில் உள்ள கொடிக் கம்பத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் தொழிலக பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி அவரைக் காப்பாற்றி விட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்தே கியூ பிரிவு போலீஸார் கப்பலுக்கு விரைந்து சென்று கோவலரி மற்றும் வாலரின் ஆகிய இருவரையும் கைது செய்து கரைக்குக் கொண்டு வந்தனர்.












Click it and Unblock the Notifications