வாடிப்பட்டி அருகே வீட்டில் வெடி பொருட்கள் பதுக்கல்: விவசாயி கைது
மதுரை: வாடிப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடி மருந்து மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், விவசாயியை கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி பகுதிகளில் மதுரை கியூபிராஞ்ச் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ராமையன்பட்டியில் பழனியாண்டி மகன் கண்ணன் என்பவரது வீட்டில் வெடி மருந்து பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து போலீசார் அவரது வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 350 டெட்டனேட்டார்கள், 90 ஜெலட்டின்குச்சிகள், 50 கிலோ எடையுள்ள 7 மூடை அமோனியம் சல்பேட் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவைகளை கியூபிராஞ்ச் போலீசார் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், கண்ணனை பிடித்து விசாரணை செய்தபோது அவரது தம்பி கச்சைகட்டி இந்திரா நகரை சேர்ந்த முருகன் என்பவர் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து விவசாயி கண்ணையாவை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.