குருபெயர்ச்சி: ஆலங்குடி, திட்டை கோவில்களில் சிறப்பு பூஜை... பக்தர்கள் பரிகாரம்
தஞ்சாவூர்: குரு பெயர்ச்சியையொட்டி, தமிழகத்தில் உள்ள குரு பரிகார தலங்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பிரசித்திபெற்ற ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜோதிட சாஸ்திரத்தின்படி 12 ராசிகளிலும் நவகிரகங்கள் வெவ்வேறு காலங்களில் இடமாறி அந்தந்த ராசிக்கு ஏற்ப பலன்களை தருகின்றன என்பது மக்களின் நம்பிக்கையாகும். அதன்படி, குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது, அந்த ராசியில் உள்ளவர்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடைபெறும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
அதன்படி, குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இன்று மாலை 6 மணியளவில் இடம்பெயருகிறார். இதனையொட்டி, தமிழகத்தில் உள்ள குரு பரிகார தலங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குரு பார்க்க கோடி நன்மை
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். நவகிரகங்களில் பூர்ண சுபகிரகம் குரு மட்டுமே. இவருக்கு 5, 7, 9 ஆகிய 3 பார்வைகள் உண்டு.
இந்த முறை கடகத்துக்கு மாறும் குரு விருச்சிகத்தை 5-ம் பார்வையாலும், மகரத்தை 7-ம் பார்வையாலும், மீனத்தை 9-ம் பார்வையாலும் பார்க்கிறார். ஒருவருக்கு திருமணம் குழந்தை பேறு, தொழில் வளர்ச்சி, பொன் பொருள் சேர்க்கை, ஆன்மீக ஞானம் போன்ற சுப பலன்கள் வியாழ நோக்கம் வந்தால் கிடைக்கும்.

யாருக்கு நன்மை
குரு சஞ்சரிக்கும் ராசியை விட பார்க்கும் ராசிகளுக்கே பலன் அதிகம். இதையே குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் சொல்வார்கள். அந்த வகையில் இந்த முறை குரு பார்க்கும் விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 3 ராசிக்காரர்களும் ஓராண்டுக்குள் சுப நற்பலன்களை பெறுவார்கள். மேஷம், கடகம், துலாம், தனுசு 4 ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யவேண்டும் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆலங்குடியில் சிறப்பு பூஜை
குருப்பெயர்ச்சியை ஒட்டி திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் எந்தவித சிரமமுமின்றி குரு பகவானை தரிசிக்க இந்து அறநிலையத்துறை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

சிறப்பு அபிஷேகம்
திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குரு பெயர்ச்சியையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திட்டை குருபகவான்
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலங்களில் திட்டை என்று அழைக்கப்படும் தென்குடித்திட்டை ஸ்தலமும் ஒன்று. குருபகவான் எங்கும் இல்லாத சிறப்போடு, தனி சந்நிதியில் தனி விமானத்துடன் ராஜ குருவாக உள்ளார். அவர் சாமிக்கும், அம்மனுக்கும் இடையில் எழுந்தருளி அருள் பாலித்து வருவதால், இக்கோவில் குரு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. குருபெயர்ச்சியை ஒட்டி இங்கு ஏராளமான பக்தர்கள் பரிகாரத்திற்காக குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications