கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு பிரவேசித்தார் குரு பகவான்: பக்தர்கள் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்: குரு பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் குரு பரிகாரத்தலங்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆரதானைகள் நடைபெற்றன. திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு அபிஷேக, ஆராதனை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நவக்கிரகங்களில் பொன்னன் என்று அழைக்கப்படும் குருபகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு நேற்று இரவு 11.02 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. கோவில்களில் யாகங்கள், பரிகார பூஜைகள், நடைபெற்றன.
குரு பரிகார ஹோமம்
வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் உள்ளது ஆபத்சகாயேஸ்வரர் கோயில். நவக்கிரகங்களில் இது குருபகவானுக்குரிய பரிகாரத் தலமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குரு பகவானை வழிபட்டனர். அதிகாலையில் உலக நன்மைக்காக குரு பரிகார ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தட்சிணமூர்த்தி வழிபாடு
பஞ்சமூர்த்திகளுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், மூலவர் குரு பகவானுக்கு விபூதி அலங்காரத்துடன் தங்க கவசமும் சாற்றப்பட்டது. உற்சவ தட்சிணாமூர்த்திக்கு மலரால் அலங்காரம் செய்யப்பட்டு வெளிபிரகாரத்தில் எழுந்தருளினார். அவருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
சிறப்பு அபிஷேகம்
ஞாயிற்றுக்கிழமை இரவு சரியாக 11.02 மணிக்கு குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசம் செய்தார். அப்போது மூலவர் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
சிறப்பு லட்சார்ச்சனை
முன்னதாக குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை முதல் கட்டமாக கடந்த 21ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற்றது. குரு பெயர்ச்சிக்கு பிறகு 2ம் கட்ட லட்சார்ச்சனை வரும் 9ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
குருவித்துறையில் கோலாகலம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறை அருள்மிகு சித்திர வல்லப பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் உள்ள குரு பகவான் சன்னதியில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குரு பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் தொடங்கிய லட்சார்ச்சனை, ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெற்றது. இரவு பரிகார மகா யாக பூஜை நடத்தப்பட்டது.
மதுரையில் சிறப்பு பூஜை
மதுரையில் இம்மையில் நன்மை தருவார் திருக்கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய குரு பகவானை தரிசனம் செய்தனர். சின்மயா மிஷன் வளாகத்தில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவில், தட்சிணாமூர்த்திக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.