மாணவி மரணம்! திட்டமிட்டு கலவரம் செய்ததாகவே தெரிகிறது! சிபிசிஐடி விசாரணை தேவையில்லை! சைலேந்திர பாபு
கள்ளக்குறிச்சி: சின்ன சேலம் மாணவி தற்கொலை தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார்.
விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜூலை 13ஆம் தேதி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகப் பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவி மரணம்
மாணவி தற்கொலைக்குக் காரணம் பள்ளி நிர்வாகம் தான் என்றும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாணவியின் உறவினர்களும், போராட்டக்காரர்களும் போராடி வருகின்றனர். இன்று நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசார் மீதும் கூட தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இது குறித்து டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்,

சைலேந்திர பாபு விளக்கம்
இது குறித்து சைலேந்திர பாபு கூறுகையில், "மாணவி மரணம் குறித்து உரிய விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மாணவியின் தற்கொலை கடிதமும் மீட்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கும் வருகிறது. இந்தச் சூழலில் போராட்டம் என்கிற பெயரில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். போலீசார், காவல்துறை வாகனங்கள், பள்ளி மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

வன்முறை கூடாது
போராட்டத்தை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ பதிவின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வோம். எனவே, உடனடியாக போராட்டத்தை அவர்கள் கைவிட வேண்டும். போலீசாரை தாக்குவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறோம்.

500 போலீசார்
சம்பவ இடத்தில் ஏற்கனவே 350 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அண்டை மாவட்டங்களில் இருந்தும், ஆயுதப்படையில் இருந்தும் கூடுதலாக 500 போலீசார் அனுப்பப்பட உள்ளனர். உயர் அதிகாரிகள் விரைந்து கொண்டு இருக்கின்றனர். ஆசிரியர்களின் மீதான புகாரில் உண்மைத்தன்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவியின் கடிதத்திலும் இதுபோன்ற மீது புகார் இல்லை. விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்.

மாணவி கடிதம்
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மாணவர்களா என்பது பிற்பாடு தான் தெரிய வரும். போராட்டக்காரர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட வேண்டும். படிக்க அழுத்தம் கொடுப்பதாக மட்டும் மாணவி அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். மற்றபடி இவர்கள் கூறுவது போன்ற குற்றச்சாட்டுகள் எதுவும் மாணவி எழுதிய கடிதத்தில் இல்லை. வன்முறைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரிய வரும். போலீசாரில் சிலருக்கும் இதில் காயம் அடைந்துள்ளனர்.

கலவரத்திற்கு திட்டம்
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை உரிய முறையில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பெற்றோரிடமும் அனைத்தும் தெரியப்படுத்தப்படுகிறது. அங்கு போலீசார் தயார் நிலையில் தான் இருந்தார்கள். ஆனால், வன்முறையில் ஈடுபட்டவர்கள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டதால் அசாதாரண சூழல் உருவானது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தது போலவே தெரிகிறது.
Recommended Video

ஆசிரியர்களைக் கைது செய்ய முடியாது
வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்தே இழப்பீடுகளை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு ஆசிரியர்கள் மீது புகார் சொல்கிறார்கள். அவர்கள் படிக்கத் தான் கூறியதாகவும் தன்னால் தான் படிக்க முடியவில்லை என்று மாணவி கடிதத்தில் கூறியுள்ளார். முழு விசாரணைக்குப் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும். எந்த காரணமும் இல்லாமல் ஆசிரியர்கள் கைது செய்ய முடியாது. இதையும் நாங்கள் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். இதுவரை பள்ளியில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை" என்றார்












Click it and Unblock the Notifications