தனுஷ் வழக்கு.. தனி அறையில் நீதிபதி ரகசிய விசாரணை
தனுஷ் மற்றும் அவரை உரிமை கொண்டாடும் தம்பதி வழக்கறிஞர்கள் தனி அறையில் நீதிபதி முன் வாதம் செய்தனர்.
மதுரை: நடிகர் தனுஷ் உரிமை கொண்டாடும் வழக்கு மார்ச் 20-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா? என கண்டறிய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மார்ச் 2 ஆம் தேதி தனுஷ் நேரில் ஆஜரானார். இதனிடையே, தனுஷிற்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கோரி கதிரேசன் தம்பதியினர் புதிதாக ஒரு மனுவையும் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து தனுஷின் அங்க அடையாளங்களை ஆராய்ந்த மருத்துவரின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, தனுஷ் தொடர்பாக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வரும் மார்ச் 9-ஆம் தேதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் தனுஷ் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தனுஷ் மற்றும் அவரை உரிமை கொண்டாடும் தம்பதி வழக்கறிஞர்கள் தனி அறையில் நீதிபதி முன் வாதம் செய்தனர். அப்போது தனுஷ் தொடர்பான வழக்கை மார்ச் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.