பட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக உறுதி- தருமபுரம் ஆதீனம் பரபரப்பு!
மயிலாடுதுறை: பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடத்திக் கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுரம் ஆதீனம் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
மே 22 ஆம் தேதி தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து மயிலாடுதுறை ஆட்சியர் தடை விதித்திருந்தது.
இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து தடையை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் பட்டினபிரவேசம் நடத்த அனுமதி தராவிட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை.. திராவிடர் கழகம் எதிர்த்த நிலையில் அரசு அதிரடி
திமுக அரசு
இந்த நிலையில்தான் திமுக அரசு பதவியேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து பல்வேறு ஆதீனங்கள் அமைச்சர் சேகர் பாபுவின் ஏற்பாட்டின் பேரில் முதல்வர் ஸ்டாலினை அவருடைய ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார். முதலில் முதல்வருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
பட்டின பிரவேசம்
இந்த சந்திப்பின் போது அவர்கள் பட்டின பிரவேச நிகழ்ச்சி அனுமதி கேட்டதாக தெரிகிறது. தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சி இந்த ஆண்டு சுமூகமாக நடைபெற வேண்டுகோள் விடுத்தோம். ஆதீனமும், ஆன்மிக உள்ளங்களும் எந்தவித கவலையும் கொள்ளாமல் இருக்கும் வகையில் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
மனிதநேயம்
வருங்காலங்களில் இதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் மனிதநேயத்துக்கு குந்தகம் ஏற்படாமல் எப்படி சுமுகமாக தீர்வு காணலாம் என்பதை ஆதீனங்கள் கலந்து பேசி நல்ல தீர்வை காண்போம். இந்த ஆண்டு மரபுப்படி அனைத்தும் நிறைவேற வேண்டுகோள் விடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவதாக முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார் என ஆதீனங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
முதல்வர் அனுமதி
இந்த நிலையில் மயிலாடுதுறையில் குத்தாலத்தில் நடந்த கோயில் குடமுழுக்கு விழாவில் தருமபுரம் ஆதீனம் கலந்து கொண்டார். அப்போது அவர் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடத்திக் கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் பல்வேறு ஆதீனங்கள் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நிலையில் தருமபுரம் ஆதீனம் இவ்வாறு தகவல் அளித்துள்ளார்.