தர்மபுரியில் மரத்தடிக்கு ஓடிய காதலன்.. மறக்க முடியாத சசிகலா! ரகசியமாக ஊருக்கு வந்த அண்ணன் செய்த வேலை
தர்மபுரி: காதல் விவகாரத்தில் குடும்பத்தினரின் மறுப்பு, பிறகு ஏற்பட்ட நெருக்கடி மற்றும் மனஅழுத்தங்கள் போன்றவை சில இளம் வயதுக்காரர்களை தற்கொலை வரை கொண்டு சென்றுவிடுகிறது.. அப்படித்தான் கடந்த மாதம் 2 மரணங்கள் ஒரே நாளில் நடந்தன.. இப்போது அது சம்பந்தமான உண்மையை போலீசார் வெளிக்கொணர்ந்துள்ளனர்.. என்ன நடந்தது?
சசிகலா - பாண்டி... இவர்கள் இருவரும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள். கேணிக்கரை வலசை என்ற பகுதியை சேர்ந்த 28 வயது பாண்டி ராமேஸ்வரத்தில் டிராவல்ஸ் தொழில் நடத்தி வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.. இதற்காக பாண்டியின் பெற்றோர், சசிகலாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.. ஆனால் சசிகலாவின் குடும்பத்தினர் அந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.. இந்த காதலையும் எதிர்த்தனர்..
சசிகலாவின் காதல்
மேலும், சசிகலாவின் அப்பா, அவர்களை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. பிறகு தங்கள் மகளுக்கு, உறவுக்கார பையனையே திருமணமும் செய்து வைத்துவிட்டார்கள்.. இந்த திருமணம் நடந்து 5 வருடங்களாகிவிட்டது.. இப்போது இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஆனால் திருமண வாழ்க்கையில் இருந்தபோதும், சசிகலா தனது பழைய காதலனான பாண்டியுடன் தொடர்பை துண்டிக்காமல், தொடர்ந்து செல்போன் மூலம் பேசி வந்துள்ளார்..
பாண்டியன் வீடு
கடந்த மாதம், சசிகலாவின் கணவர் முருகன், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை விஷயமாக சென்றபோது, சசிகலா தனது காதலன் பாண்டியுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், ராமநாதபுரம் மகளிர் போலீஸில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, பாண்டி மற்றும் சசிகலாவை கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு இருவரிடமும் மற்றும் பெற்றோரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. சசிகலாவுக்கு அறிவுரை சொன்னார்கள்.. இறுதியில் அவரது அப்பா கண்ணனுடன் சசிகலாவை பத்திரமாக வீட்டிற்கும் அனுப்பி வைத்துள்ளனர்..
பழைய காதல்
ஆனால் போலீசார் சொன்ன அத்தனை அறிவுரைகளும் காற்றில் கரைந்து போய்விட்டது.. சசிகலாவின் மனதில் அந்த பழைய காதலை மறக்கவே முடியவில்லை.. கணவனுடன் நிம்மதியாக வாழ முடியாமல், காதலனுடனும் சேர்ந்து வாழ முடியாமல் தவித்து வந்தார் சசிகலா.. இதனால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது.. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தன்னுடைய அப்பாவின் வீட்டிலேயே சசிகலா தற்கொலை செய்து கொண்டார்..
தர்மபுரியில் காதலன்
இந்தவிஷயம், பாண்டிக்கு தெரியவந்தது.. தர்மபுரி மாவட்டம் பாளையம் சுங்கச்சாவடி அருகே வந்தபோதுதான் சசிகலா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்துள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்த பாண்டி, சுங்கச்சாவடி அருகே காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்த சாலையோரத்தில் இருந்த மரத்தில் கயிறு கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்,
சசிகலா மரணம் தொடர்பாக உச்சிப்புளி போலீசாரும், தருமபுரி மரணம் தொடர்பாக தொப்பூர் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சசிகலா தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில், சசிகலா தற்கொலை செய்யவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் இதுகுறித்து ரகசிய விசாரணையை மேற்கொண்டனர்.
ரகசியமாக வந்த அண்ணன்
அப்போதுதான், வெளிநாட்டில் வேலை செய்து வரும் சசிகலாவின் அண்ணனான அஜித் ரகசியமாக ஊருக்கு வந்து சசிகலாவை கொலை செய்து சடலத்தை தூக்கில் தொங்க விட்டதும், இந்த கொலைக்கு சசிகலாவின் கணவரான முருகன் மற்றும் அஜித்தின் நண்பர்களான தினேஷ் வயது 23, ராஜேஷ் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து முருகன் மற்றும் தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டில் அஜித்தை கைது செய்வதற்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல தலைமறைவான ராஜேஷையும் தேடி வருகின்றனர்... அஜித் வெளிநாட்டில் இருந்து ரகசியமாக வந்து எப்படி இந்த கொலையை செய்தார் என்ற அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகி உள்ளது..
ஒரே நாளில் ஃபிளைட்
பாண்டியுடனான காதலை திருமணத்திற்கு பிறகும் கைவிட சசிகலா மறுத்து வந்தாராம்.. இதை கேள்விப்பட்ட அஜித், கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி வெளிநாட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் ஃபிளைட்டில் மதுரை வந்திருக்கிறார். அன்றிரவு ஒரு காரில் தனது வீட்டிற்கு சென்ற அஜித், அங்கு சசிகலாவிடம் காதலை கைவிட்டு, கணவருடன் வாழும்படி அட்வைஸ் தந்துள்ளார்..
அப்போது சசிகலாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அஜித், கழுத்தில் துணியை இறுக்கி சசிகலாவை கொலை செய்துள்ளார். பிறகு அவரை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்தது போல சித்தரித்து விட்டு யாருக்கும் தெரியாமல் மீண்டும் காரில் இரவோடு இரவாக மதுரை சென்றுள்ளார்.. அங்கேயே அன்றைய தினம் தங்கியிருந்து பிறகு விமானத்தில் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் உள்ளவர்களும், காதல் தோல்வியால் சசிகலா தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளதும் தற்போது அம்பலமாகி உள்ளது.. இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications