தர்மயுத்தம் 2.0 : மைத்ரேயன் ஃபேஸ்புக் பதிவும்... அரசியல் அதிர்வுகளும்
எங்க போகிற போக்கப் பாத்தா தர்மயுத்தம் சீசன் 2 ஆரம்பிச்சிரும் போலயே என்று பேச ஆரம்பித்து விட்டனர் அதிமுகவினர்.
Recommended Video
சென்னை: பிளவுபட்டிருந்த அதிமுக அமாவாசை நாளில் இணைந்தாலும் இணைந்தது....ஒவ்வொரு அமாவாசை வரும் போதும் யாராவது ஏழரை இழுத்து அதிர்வுகளை உருவாக்கிறார்கள். ஏதேது.. தர்மயுத்தம் 2.0 நடந்துரும் போலயே என்று பேச ஆரம்பித்து விட்டனர்.
துணைமுதல்வர் ஓபிஎஸ் பிரதமர் மோடியைப் பார்க்கப் போனால் முதல்வருடன் மோதல் அதான் பார்த்து பேசி பஞ்சாயத்து செய்யப் போயிருக்கிறார் என்று எதிர்கட்சியினர் பத்த வைக்கின்றனர்.
ரெய்டு ஒருபக்கம் சசிகலா குடும்பத்தை பதம் பார்க்க, டிடிவி தினகரனோ கோவில் கோவிலாக போய் பரிகாரம் செய்து வர, என்ன வேணா நடக்கட்டும் நாங்கள் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடுவோம் என்று கூறுகிறார்கள்
மைத்ரேயன் மனக்குமுறல்
அணிகளை இணைத்துவிட்டு ஓபிஎஸ் துணை முதல்வராக வலம் வருகிறார். நம்மளை எல்லாம் யாரும் மதிக்கிறது இல்லையே என்பது பலரது மனக்குமுறலாக இருக்கிறது.
அதை வெளிப்படையாகவே கொட்டி விட்டார் ஒபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன்.
அதிர்வலைகள் அதிகரிப்பு
இரு தினங்களுக்கு முன்பு மைத்ரேயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?" என்று சூசகமாக ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார்.
என்ன மனம்?
இதற்கு பதில் சொன்ன அமைச்சர் ஜெயக்குமார், மைத்ரேயன் சொல்லும் மனம் என்னவென்று புரியவில்லை என்றார். அதோடு உள்ளுக்குள்ள பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை இதுபோல வெளியில் பேச வேண்டிய அவசியமில்லை என்றும் ஒரு குட்டு வைத்தார்.
நாஞ்சில் சம்பத் கிண்டல்
இந்த பதிவுக்கு உடனடியாக டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் நச்சென்ற கிண்டலை பதிவு செய்தார். மைத்ரேயன் மனதில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது 6.5 ரிக்டெர் அளவு நிலநடுக்கம். இதுபோல நிலநடுக்கம் அந்தப்பக்கம் அதிகம் உருவாகும் என்று கூறினார் நாஞ்சில் சம்பத்.
தம்பித்துரை அதிரடி
அதிமுக எம்.பி., தம்பிதுரையோ, "மைத்ரேயன் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து" எனக் கூறியிருந்தார். அதிமுகவிற்கு இரட்டை இலை கிடைக்கவேண்டும், அதுதான் இப்போதைக்கு முக்கியம் என்று கூறினார்.
மைத்ரேயன் மீண்டும் பதிவு
இதற்கு பதில் சொல்லும் விதமாக மைத்ரேயன் மீண்டும் தனது பதிவில், இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத் தான் நான் எதிரொலித்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் அணி
முதல்வர் அணியினர் ஒபிஎஸ் அணி என்று ஒதுக்க வேண்டாம். அதிமுக மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார். தர்மயுத்தம் 2.0 ஆரம்பிக்கப் போகுதோ என்ற பேச்சு அடிபட ஆரம்பித்து விட்டது. அடடா மறுபடியும் மொதல்ல இருந்தா என்று அதிமுக தொண்டர்கள் பேச... டிடிவி தினகரன் அணியினரோ நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்களாம்.
விடுப்பா விடுப்பா அதிமுகன்னா உடைவதும்... அப்புறம் இணைவதும் சகஜமப்பா