திமுக-தேமுதிக கூட்டணிக்கு எதிராக தயாநிதி அழகிரி கொந்தளிப்பு!
சென்னை: 'திமுகவை ஆட்சியில் அமர்த்துவது புதைகுழியில் கால் வைப்பதற்கு சமம்' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்பு ஒருமுறை அளித்த பத்திரிகை பேட்டியை டிவிட்டரில் ஷேர் செய்து, திமுக-தேமுதிக கூட்டணியா? என கேலியாக கேட்டுள்ளார், திமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் மத்திய அமைச்சரின் மகனுமான மு.க.அழகிரியின் மகன், தயாநிதி அழகிரி.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை கூறிவந்தார். திமுக வரும் சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடையப்போகிறது என்றும், ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணம், ஒரு காமெடி என்றும் அழகிரி கூறினார்.
அழகிரியின் கருத்துக்கள் திமுகவில் குடைச்சலை கொடுத்த நிலையில், அவருக்கும் திமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என்று அதிரடி அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது திமுக தலைமை.

இந்நிலையில், அழகிரியின் மகனும், சினிமா தயாரிப்பாளருமான, தயாநிதி அழகிரி, டிவிட்டரில் இன்று, விஜயகாந்த், ஒரு பத்திரிகைக்கு அளித்த பழைய பேட்டியை எடுத்துப்போட்டு, திமுக-தேமுதிக கூட்டணி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் ஷேர் செய்த அந்த பத்திரிகை செய்தியில், திமுகவை ஆட்சியில் அமர்த்துவது புதைகுழியில் கால் வைப்பதற்கு சமம் என்று விஜயகாந்த் கூறியது தலைப்பாக உள்ளது. இதன்மூலம், திமுகவை விமர்சனம் செய்த விஜயகாந்த்துடனா கூட்டணி என்று திமுகவை பார்த்து தயா அழகிரி கேள்வி எழுப்புகிறாரா, அல்லது, இப்படிப்பட்ட திமுகவுடனா உங்கள் கூட்டணி என விஜயகாந்த்துக்கு கேள்வி எழுப்பியுள்ளாரா என்பதை தயாநிதி அழகிரிதான் தெரிவிக்க வேண்டும்.
எது எப்படியோ, அழகிரியை தனித்து வைத்துவிட்டு, தேர்தலை சந்தித்தால் உட்கட்சியில் பூசல் அதிகரிக்கும் என்பதற்கான அறிகுறியை தயாநிதி அழகிரி காட்டிவிட்டார். அழகிரியை திமுகவில் சேர்க்க வேண்டும் என்று டிவிட்டரில் நேற்று ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. இந்நிலையில், மீண்டும் அழகிரி விவகாரம் திமுகவுக்கு தலை வலியை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications